கன்னியாகுமரிக்கு தெற்கே 80 கி.மீ தொலைவில் "ஓகி" புயல்! #ockhi
கன்னியாகுமரி அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் ஒகி புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: வங்கக் கடலில் ஓகி புயல் உருவாகியுள்ளதாகவும், கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த இந்த புயல் மெதுவாக குமரியை விட்டு நகரத் தொடங்கியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தப் புயல் காரணமாக மணிக்கு 167 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும். இது மிகத் தீவிர புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக அடுத்த 36 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் மிக கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடிக்கிறது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை, புதுச்சேரி, கடலூரில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் விடுமுறை
திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீனபிடிக்க செல்லவில்லை. தஞ்சை, நாகை, ராமநாபுரம், மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீ்றறம் இருப்பதால் அப்பகுதி மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.
ஓகி புயல் உருவானது
கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வானிலை ஆய்வு மையம் கணித்தது போல ஓகி புயல் குமரிக்கு 60 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திற்கு 120 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருப்பதாக காலையில் வானிலை மையம் கணித்தது. தற்போது ஓகி புயல் குமரியை விட்டு மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது.
வெளுத்து வாங்கும் மழை
ஒகி புயல் காரணமாக அடுத்த 36 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் மிக கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக, தென் கேரள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வானிலை மையம் எச்சரித்தது போல மழை வெளுத்து வாங்கி வருகிறது.
மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்
கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. புயல் காரணமாக மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
முடங்கிய கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் கோரத்தாண்டவமாடியுள்ளது. காற்றுடன் கூடிய பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. புயல் காரணமாக ரயில் போக்குவரத்து முடங்கியது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்கள் கரை திரும்பவில்லை.