விடாது விரட்டும் வர்தா புயல்.. வலுவிழந்து தருமபுரி அருகே நிலைக்கொண்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்
வர்தா புயல் வலுவிழந்து தருமபுரி அருகே 40 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வர்தா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தருமபுரி அருகே நகர்ந்து 40 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் நேற்று சென்னையை சூறையாடியது. புயல் காற்றால் கட்டங்களின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.

புயல் கரையைக் கடந்தபோது வீசிய பேய்க்காற்றால் பல கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள், விளம்பர பலகைகள், பெட்ரோல் பங்க் மேற்கூரை, ரயில்வே பிளாட்பார கூரைகள் பிய்த்தெறியப்பட்டன. இதனிடையே பிற்பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது இதனால் நேற்று இரவு 8 மணி வரை பலத்த காற்று வீசியது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் 192 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய வர்தா புயல் நேற்று மாலை 6.30 மணியளவில் முழுவதுமாக கரையை கடந்து நிலப்பகுதியில் மேற்கு நோக்கி திருவண்ணாமலை மாவட்டம் வழியாக செல்லும் போது வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இவை தற்போது, தருமபுரி அருகே நகர்ந்து 40 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் தாழ்வு நிலையாக மாறி வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications