சென்னையை சூறையாடிய வர்தா புயல்... பெங்களூருவையும் பதம் பார்த்தது- விடிய விடிய மழை
சென்னையில் 7 மணிநேரம் கோரத்தாண்டவம் ஆடியது வர்தா புயல். சென்னையில் கரையை கடந்த போதும் பெங்களூருவையும் பதம் பார்த்து வருகிறது வர்தா புயல்.
சென்னை: 75 ஆண்டுக்குப் பின்னர் சென்னையை தாக்கிய அதிதீவிர புயல் வலுகுறையாமல் பெங்களூருவையும் நேற்று பதம் பார்த்தது. பெங்களூருவில் விடிய விடிய மழை பெய்தது.
வங்கக் கடலில் உருவான அதிதீவிர புயலான வர்தா சென்னையில் நேற்று பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து தாக்கியது. இதனால் சென்னை மாநகரமே நாசக்காடாகிப் போனது.
பேய்க்காற்றும் கனமழையும் சென்னையை உருக்குலைத்துப் போட்டது. புயல் கரையைக் கடந்த போது உச்சகட்டமாக மணிக்கு 190 கி.மீ வேகத்தில் பயங்கர காற்றும் வீசியது. பேரிரைச்சலுடன் கொட்டிய கனமழை சென்னைவாசிகளை அலற வைத்தது.
இப்புயல் நேற்று இரவு 7 மணி அளவில் முழுமையாக கரையைக் கடந்தது. ஆனாலும் வலுகுறையாமல் திருவண்ணாமலை வழியாக பெங்களூருவை நோக்கி சென்றது. பெங்களூருவில் விடிய விடிய மழை பெய்தது.
இன்று கர்நாடகா மாநில பகுதிகளை தாக்கிவிட்டு நாளை கோவாவில் கரையைக் கடக்கிறது வர்தா புயல்.