வர்தா தாக்கி ஒருவாரமாகியும் வராத மின்சாரம்- சென்னை, புறநகரில் மக்கள் தவிப்பு
வர்தா புயல் தாக்கி ஒருவாரத்திற்கு மேலாகியும் மின் விநியோகம் சீரடையவில்லை. 8 நாட்களாக மின்சாரம் இன்றி சென்னையிலும் புறநகரிலும் மக்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை: வங்க கடலில் உருவான வர்தா புயல் கடந்த 12ம் தேதி சென்னையை கரையைக் கடந்தது. அப்போது வீசிய சூறாவளி காற்றுக்கு பேயாட்டம் போட்ட மரங்கள், வேருடன் சாய்ந்தன. சென்னை, புறநகரில் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் சென்னை, புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
குடிநீர் இன்றியும், மின்சாரம் இன்றியும் பல நாட்களாக மக்கள் தவித்து வருகின்றனர். ஒருவார காலத்திற்கும் மேலாகி விட்ட நிலையில் மின் விநியோகம் இன்னமும் சீரடையவில்லை.

கொசு தொல்லை
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் அருகே உள்ள படப்பை, கரசங்கால் உள்ளிட்ட பல கிராமங்களில் 7 நாட்களாக மின்விநியோகம் சீரடையாததால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கடும் குடிநீர் தட்டுப்பாடு, இரவில் படுக்க முடியாத சூழல், கொசு தொல்லை என சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் துயரத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
வர்தா புயல் தாக்கி 1 வாரம் ஆகிவிட்ட நிலையிலும் மின் விநியோகம் சீரடையாததை கண்டித்து திருவள்ளூர் அருகே 4 அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருவள்ளூர் அருகே நடைபெற்று வரும் புயல் நிவாரண பணிகளை அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, காமராஜ், வேலுமணி, பென்ஜமின் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கிளம்பிய அமைச்சர்கள்
அப்போது மின்சாரமின்றி தவித்து வரும் கிராம மக்கள், அமைச்சர்களை முற்றுகையிட்டு சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். மக்களின் புகார்களுக்கு உரிய விளக்கம் அளிக்க முடியாததால் அமைச்சர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இருளில் தவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள மறைமலைநகரை சுற்றியுள்ள கிராமங்கள் தொடர்ந்து இருளில் மூழ்கி கிடக்கின்றனர். இதனால் சாய்ந்து கிடக்கும் மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணியில் கூடுதல் பணியாளர்களை அமர்த்தி போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலையாக குவிந்திருக்கும் குப்பைகள்
கடந்த 7 நாட்களாக மலையாக குவிந்திருக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது. பலருக்கும் வாந்தி பேதி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதால் சுகாதாரத்துறையினர் மருந்துகளை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications