ஆர்.கே. நகரில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பாடலுடன் களைகட்டும் பிரச்சாரம்
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. ஆடல் பாடல் என அமர்களப்படுகிறது.
சென்னை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடிப்பில் வெளியான பாடல்களை போட்டு வீதி வீதியாக ஆடல் பாடலுடன் ஆர்.கே. நகரில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.
ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்லுக்கான வாக்குப்பதிவு ஆர்.கே. நகரில் நடைபெற உள்ளது. களத்தில் 62 வேட்பாளர்கள் உள்ளனர். ஆனாலும் பிரதானமாக 8 பேர் உள்ளனர்.
அதிமுக அம்மா வேட்பாளர் டிடிவி தினகரன், அதிமுக புரட்சித்தலைவி அம்மா வேட்பாளர் மதுசூதனன், பாஜகவின் கங்கை அமரன், திமுகவின் மருதுகணேஷ் பரபரப்பாக பிரச்சார களத்தில் உள்ளனர்.
பங்குனி மாத வெயில் ஒருபக்கம் பட்டையை கிளப்ப தேர்தல் பிரச்சார களத்திலும் அனல் பறக்கிறது. அனலுக்கு இதமாக கரகாட்டம், ஆடல் பாடல் என அமர்களப்படுகிறது. அதிமுகவின் இரு அணிகளுமே இரட்டை இலையை பயன்படுத்த முடியாவிட்டாலும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த பாடல்களைப் போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பிரச்சார களத்தில் எம்ஜிஆர் வேடமிட்டவர்களும் வெயிலில் காத்திருந்து வாக்கு சேகரிக்கின்றனர். ஒரு எம்ஜிஆர் தொப்பிக்கு வாக்கு கேட்க... இன்னொரு எம்ஜிஆர் இரட்டை விரலை காட்டி இரட்டை மின் விளக்குக்கு வாக்கு கேட்கிறார். கச்சேரி களைக்கட்டத்தான் செய்கிறது.