மாமியாரைக் கவனிக்காத மருமகள் – கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாமியாருக்கு சரிவர பணிவிடை செய்யாத மருமகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டேகுப்பம் அருகே உள்ள ஆண்டி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவரது, மகன் பெருமாள். இவரது மனைவி மங்கம்மாள்.
வயது முதிர்வு காரணமாக, தனது மகன் பெருமாள் வீட்டிலேயே கோவிந்தம்மாள் வசித்து வருகிறார். கோவிந்தம்மாளுக்கு தேவையான பணிவிடைகளை, அவரது மருமகள் மங்கம்மாள் சரியாக செய்து கொடுப்பதில்லை.
மேலும், கோவிந்தம்மாள் சாப்பாடு கேட்டால் சாப்பாட்டு கொடுக்காமல் அவர் மனம் நோகும்படி திட்டுவதும், அவரை ஆபாசமாக பேசுவதும், வீட்டை விட்டு வெளியே விரட்டுவதுமாக, மங்கம்மாள் இருந்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கோவிந்தம்மாள், கிருஷ்ணகிரி அனைத்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த உதவி ஆய்வாளர் செந்தாமரை மாமியாரை கவனிக்காத மருமகள் மங்கம்மாளை கைது செய்துள்ளார்.