தண்ணி இல்லை.. மூட்டைப் பூச்சி தொல்லை.. என்னத்த ரயில்வே நிர்வாகமோ!
நெல்லை: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பகல் நேர தொலைதூர ரயில்களில் பாரமரிப்பு மற்றும் தண்ணீர் பிடிப்பது போன்ற பணிகள் அறவே இல்லாததால் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.
ரயில் பயணிகளுக்கு ஏற்படும் இன்னல்களுக்கும், தொந்தரவுகளுக்கும் முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
பாசஞ்சர்களைப் பொறுத்தவரை, ரயில் பயண பிரச்சினைகள் என்பது எப்போதுமே எக்ஸ்பிரஸ் வேகத்தில்தான் உள்ளதே தவிர குறைந்தபாடில்லை.

கூட்டத்திற்குக் குறைச்சல் இல்லை
தமிழகத்தில் இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் மற்றும் விரைவு ரயில்களில் பயணிகள் கூட்டத்திற்கு அளவே கிடையாது. சீசன் காலம் மட்டுமல்லாமல் மற்ற காலங்களிலும் சீட்கள் அனைத்தும் நிறைந்தே செல்கின்றன.

சவுகரியம் ஜாஸ்தி
பஸ்சை விட கட்டணம் குறைவு, குழந்தை, முதியோர் என குடும்பத்துடன் சவுரியமாக பயணி்க்கும் வசதி போன்ற காரணங்களால் ஏழைகள் மட்டுமின்றி வசதி படைத்தவர்களும் ரயில் பயணத்திற்கே முன்னுரிமை தருகின்றனர்.

நல்ல டப்பு...
தென்மாவட்ட ரயில்கள் மூலம் ரயிலவே துறைக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. வட மாவட்டத்தை பொறுத்த மட்டில் டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் இங்கு தான் அதிகம். இருப்பினும் ரயில்வே துறையின் சேவை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பகல் நேர ரயில்களின் தொல்லை
பகல் நேர ரயிலான குருவாயூர்-சென்னை விரைவு ரயில், கோவை-நாகர்கோவில் பாசஞ்சர் மற்றும் மும்பை செல்லும் ரயில்கள் பராமரிப்பு மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தண்ணீர் பிடிக்க ஆள் இல்லை
நாகர்கோவிலிலோ அல்லது மதுரையிலோ இந்த ரயிலுக்கு தண்ணீர் பிடிப்பது வழக்கம். நாகர்கோவிலில் பணியாளர் போதுமான அளவு இல்லாததால் அதிக நேரம் அங்கு நிறுத்தப்பட்டும் பல நாட்களாக தண்ணீர் பிடிப்பது இல்லை.

மதுரையில் சிரமம்
மேலும் மதுரையில் 10 நிமிடம் மட்டுமே ரயில் நிற்கும் இதனால் அங்கு தண்ணீர் பிடிப்பது சிரமம். மேலும் கழிவறை பழுது, தண்ணீர் குழாயில் கசிவு, மூட்டைப் பூச்சித் தொல்லை போன்ற பல காரணங்களால் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் அடிப்படை வசதிகள் குறைவால் பயணிகள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications