3வது முறையாக மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மூன்றாவது முறையாக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை திமுக தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார். இதையடுத்து அவர் இன்று தேர்தல் அறிக்கையயும் வெளியிட்டுள்ளார்.
இந்த பரபரப்பான சூழலில் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளரான தயாநிதி மாறன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முக்கிய தலைவர்களில் ஒருவருமான முரசொலி மாறனின் இரண்டாவது மகன் தான் தயாநிதி மாறன். கருணாநிதியின் பேரனான அவர் ஏற்கனவே மத்திய சென்னை தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது மூன்றாவது முறையாக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்முறை மத்திய சென்னையில் போட்டியிட்டு வென்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆனார். இரண்டாவது முறை வென்றபோது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஆனார். இளம் வயதிலேயே மத்திய அமைச்சரான பெருமையை பெற்ற அவர் நாடு முழுவதும் ஒரு ரூபாய்க்கு தொலைபேசியில் பேசும் வசதியை கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.