சென்னையில் விடிய விடிய மின்தடை: தமிழகம் முழுவதும் மிரட்டும் மின்வெட்டு- ஒரு 'ஷாக்' ரிப்போர்ட்!
சென்னை: 'ஜூன் 1ம் தேதி முதல் மின்வெட்டு முழுவதுமாக நீங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா மே இறுதியில் அறிவிப்பு வெளியிட்டு தமிழக மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
ஆனால் அறிவிப்பு வெளியான நாள் முதலே சென்னை முதல் குமரி வரை தமிழகம் முழுவதும் மின்வெட்டு மிரட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்று அதிரடியாக அறிக்கை வெளியிட்டார் பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ்.
3 மாதங்களில் மின்வெட்டுப் பிரச்னையை தீர்ப்போம் என கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இன்னும் மின்வெட்டுப்பிரச்சினையை தீர்த்தபாடில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன் இடித்துரைத்து அறிக்கை வெளியிட்டார் திமுக தலைவர் கருணாநிதி.
காற்றாலை என்னவோ 3000 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் மின்பாதை சரியில்லாமல் அவற்றின் உற்பத்தியை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் தமிழ்நாடு மின்வாரியத்தினர்.
தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக மாறிவிட்ட மின்வெட்டுப் பிரச்சினை பற்றி திரட்டப்பட்ட ஷாக் ரிப்போர்ட் இவை மேற்கொண்டு படியுங்களேன்.
13000 மெகாவாட் மின்தேவை
தமிழகத்தின் இப்போதைய மின்தேவை 13,000 மெகாவாட். அனல்மின் நிலையம், நீர்மின் நிலையங்கள் மற்றும் காற்றாலை மூலமாகப் பெறப்படும் மின்சாரம் ஆகியவை தமிழகத்தின் மின்தேவைக்குப் போதுமானதாக இல்லை.
வறண்ட அணைகள்
நீர்மின் நிலையங்கள் செயல்படும் அளவுக்கு எந்த அணைகளிலும் போதுமான நீர் இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. அனல்மின் நிலையங்கள் அடிக்கடி பழுதடைந்து படுத்துவிடுகின்றன.
அவதியூட்டும் அனல்மின்நிலையங்கள்
நீண்டகாலமாகிவிட்ட அனல்மின் நிலையங்களை அடிக்கடிப் பழுதுபார்த்து பராமரிப்பு செய்ய வேண்டிய நிலைமை இருப்பதால், பராமரிப்புக்காக அடிக்கடி மின் உற்பத்தியை நிறுத்த வேண்டியிருக்கிறது.
மின்பாதை வசதியில்லை
இதைச் சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், அவற்றை முழுமையாகத் தமிழகத்துக்குக் கொண்டுவந்து சேர்க்க போதுமான மின்பாதை வசதி இல்லை.
3000 மெகாவாட் தட்டுப்பாடு
தற்போது தமிழகத்தின் மின்பற்றாக்குறை 2,000 முதல் 3,000 மெகாவாட் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது. எனவே மின்வெட்டு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
அறிவிக்கப்படாத மின்வெட்டு
மின்வெட்டு ரத்து செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்த நாள்முதலே சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலாகிவிட்டது. எப்போது மின்சாரம் இருக்கும் எப்போது போகும் என்றே தெரியவில்லை சென்னைவாசிகளுக்கு. பெரும்பாலான நேரங்களில் லோ வோல்டேஜ் மின்சாரம் சப்ளை ஆவதால் ஃபேன், மிக்ஸிகள், ஏசி மெஷின்கள் ஓடுவது இல்லை. தொழிற்சாலைகளுக்கு மட்டும், தடையில்லா மின்சாரம் வழங்கி விட்டு, சென்னையில், குடியிருப்புகளில், மின்தடை ஏற்படுத்துவது, பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புழுக்கத்தில் தவிக்கும் மக்கள்
சென்னையில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் புழுக்கத்தில் சிக்கித் தவிக்கின்றனர். தகிக்கும் அனல் ஒருபுறம், கொசுக்கடி மறுபுறம் என சென்னைவாசிகளை.மின்வெட்டு மிரட்டுகிறது
விடிய விடிய மின்தடை
தற்போது, கோடை முடிந்தும், வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில், வழக்கத்தை விட, இரவு நேரத்தில், 'ஏசி' பயன்பாடு அதிகரித்து உள்ளது.இதையடுத்து, 'ஓவர் லோடு' என்ற பெயரில், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில், இரவு 10:00 மணிக்கு மேல், தொடர்ச்சியாக மின்தடை செய்யப்படுகிறது.குறிப்பாக, சைதை, மாதவரம், ஆலந்தூர், வேளச்சேரி, சாலிகிராமம் - பங்காரு தெரு, மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, எழும்பூர், அண்ணாநகர், ஆவடி, அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், விடிய விடிய மின்தடை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
நெல்லையில் தொல்லை
நெல்லை மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் இரண்டு முதல் மூன்று மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. கிராமங்களின் நிலைமை மிகவும் மோசம். பகலில் மூன்று மணி நேரம், இரவில் மூன்று மணி நேரம் என மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இந்த மின்வெட்டு காரணமாக சிறு தொழில்கள் முடங்கிப் போய் இருக்கின்றன.
மூடப்பட்ட விசைத்தறிக்கூடங்கள்
சங்கரன்கோவில் பகுதியில் உள்ள விசைத்தறித் தொழில் பெரும் நட்டத்தை சந்திப்பதால், பல தொழிற்கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் மாற்றுத் தொழில் வாய்ப்புகளைத் தேடி கேரளாவுக்குச் செல்லும் அவலமும் உள்ளது.
காற்றாலை கை கொடுத்தும்
ஆனாலும், நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மூலமாக மின் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. தென் மேற்குப் பருவக்காற்று பலமாக வீசுவதால் கடந்த ஒரு வாரமாகக் காற்றாலைகளில் இருந்து இடைக்கும் மின்சாரம் கணிசமாக கூடியிருக்கிறது. கடந்த மாதத்தில் வெறும் 400 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி, இப்போது 3,000 மெகாவாட் அளவுக்கு உயர்ந்துள்ளது எனினும் மின்வெட்டு ஏன் என்பதுதான் புரியாத புதிர்.
ஆறு மணி நேர மின்வெட்டு!
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திண்டிவனம் போன்ற நகரங்களில் காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் என மொத்தம் நான்கு மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. சில நாட்களில் இது ஆறு மணி நேரமாகவும் நீடிக்கிறது என்கின்றனர்.
விவசாயம் பாதிப்பு
கத்திரி முடிந்த பிறகும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மின்வெட்டினால் வீட்டில் குடியிருக்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். விவசாய பூமியான விழுப்புரத்தில் மின்வெட்டால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது விவசாயிகள்தான். வயல்களில் நீர் இறைக்கத் தேவைப்படும் மூன்று முனை மின்சாரம் மூன்று மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
எம்.எல்.ஏவை வெட்டிய கும்பல்
சிவகங்கை மாவட்டத்தில் முழுமையாக மின் தட்டுப்பாடு தீர்ந்துவிட்டதாக சொல்ல முடியாது. திடீர் திடீரென மின்சாரம் தடைப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த மின்வெட்டை பயன்படுத்தித்தான் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரனை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டினார்கள். எனவே பவர் கட் ஆனாலே மக்கள் அச்சத்துடனே இருக்க வேண்டிய நிலைமை உள்ளது.
வேலூரில் கொதிப்பு!
வேலூர் மாவட்டத்தில் முன்பெல்லாம் மின்வெட்டு நேரங்களை அறிவித்த மின்துறை இப்போதெல்லாம் கிடைத்த நேரத்தில் மின்வெட்டை அமல்படுத்தி வருகிறது. நகரப் பகுதியில் ஒரு மணி நேரமும், கிராமப்புற பகுதியில் இரண்டு மணி நேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருக்கிறது. இந்த மின்வெட்டால் பெரிய தொழில் நிறுவனங்கள் இதில் இருந்து தப்பித்துக்கொண்டாலும், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற விவசாயிகள் மின்வெட்டால் கடுமையாக பாதித்துள்ளனர்.
கடலூரில் தவிக்கும் விவசாயிகள்
கடலூர் மாவட்டத்தில் நகரத்தில் 30 நிமிடங்கள் மின்வெட்டும் கிராமப்புறங்களில் ஒரு மணி நேரம் மின்வெட்டும் உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் அடையும் பாதிப்பை விவசாயிகளின் பாதிப்பு அதிகம்.
இருளில் திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஜூன் 4-ம் தேதி வரையில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 நிமிடம் மின்சார நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது இரவு நேரங்களிலும் மதிய நேரங்களில் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மும்முனை மின்சாரத்தில் வழக்கம்போல மின்தட்டுப்பாடு இருப்பதால், விவசாயிகளும் சிறுதொழில் செய்பவர்களும் எப்போதும்போல திக் திக் நிலையில்தான் இருக்கின்றனர்.
மீனவர்கள் தவிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை மற்ற மாவட்டங்கள் போலவே மின்தடை இங்கும் அமலில் உள்ளது. இதனால் நீண்ட கடற்கரைப் பகுதியைக்கொண்ட இந்த மாவட்டத்தில் மீனவர்களால் பிடித்து வரப்படும் மீன்களைப் பாதுகாக்கத் தேவையான ஐஸ் கட்டி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் ஐஸ்கட்டிகள் முழுமையாக கெட்டியாகாமல் எளிதில் உருகிவிடும் நிலையிலேயே தயாராகிறது. இதனால் ஐஸ்கட்டி தொழிலகங்களுக்கு நட்டம் ஏற்படுவதுடன் மீனவர்களுக்கு வழங்கப்படும் ஐஸ்கட்டிகளுக்கான விலையும் கூடுதலாகிறது.
திருச்சியும் தப்பவில்லை
திருச்சி மாவட்டத்தில் மின்வெட்டு அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் புலம்புகிறார்கள். முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முன்பைவிட இப்போது மின்வெட்டு அதிகமாக இருக்கிறது. இதனால் செய்வதறியாமல் தவிக்கின்றனர் ஸ்ரீரங்கவாசிகள்.
தண்ணீரின்றி வாடும் பயிர்கள்
காவிரி டெல்டா பகுதிகளிலேயே காணப்படும் தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்கெனவே மாவட்டத்தின் முக்கியத் தொழிலான விவசாயம் நொடிந்துள்ளது. இப்போது தலை தூக்கியுள்ள மின் பிரச்னை விவசாயிகளைக் கூடுதலாக வதைக்கிறது. வாழை, வெங்காயம், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்குத் தண்ணீர் கட்டமுடியாமல் தவிக்கிறார்கள்.
மூடுவிழா காணப்பட்ட தொழிற்சாலைகள்
கடந்த சில வருடங்களாக திருச்சியில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தொடர்ந்து நடத்த முடியாமல் மூடுவிழா கண்டுள்ளதாகவும் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளதாகவும் புலம்புகிறார்கள், அப்பாவி மக்கள்.
சேலத்திலும் மூடுவிழா
சேலத்தில் எந்த நேரத்தில் மின்சாரம் வருகிறது என்றே சொல்ல முடியவில்லை. அறிவிப்புக்கு முன்பு ஐந்து மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இப்போது அதைவிட அதிக நேரம் கட் செய்கிறார்கள். இதனால் பவர்லூம், சேகோ ஃபேக்டரி, வெள்ளிப் பட்டறை, ஸ்டீல் உற்பத்தி உட்பட பல தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல சிறுதொழில்கள் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டனர்.
விருதுநகரில் மகிழ்ச்சி
விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜூன் 1-ம் தேதிக்கு முன், தினமும் நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை மின்தடை இருந்தது. பிறகு ஜூன் 5-ம் தேதிக்குப் பிறகு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. இப்போது தினமும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாக மின்தடை குறைந்துவிட்டது. இப்போது எவ்வளவோ தேவலாம் என்று கருதுகின்றனர் சிவகாசி உள்பட மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவன நிர்வாகிகள்.
பரிதாபத்தில் நெசவுத் தொழில்
மதுரை மாநகருக்குள் எந்த நேரம் மின்சாரம் போகும், எப்போது வரும் என்று சொல்ல முடியாது. புறநகர் பகுதிகளில் வழக்கம்போல காலையில் இரண்டு மணி நேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும் மின்வெட்டு. மதுரையில் சமீபத்தில் பெய்த திடீர் மழையாலும் சூறாவளி காற்றாலும் சாய்ந்த மின்கம்பங்களை இன்னும் சரிசெய்யவில்லை. அதனால் கூடுதல் மின் பிரச்னையால் தவிக்கிறார்கள் மக்கள். நெசவுத்தொழில் பரிதவிக்கிறது.
மகிழ்ச்சிபுரியான தருமபுரியில்
தருமபுரி மாவட்டத்தில் ஓரளவுக்கு மின்வெட்டு சரிசெய்யப் பட்டுவிட்டது என்கிறார்கள். ஐந்து நிமிடம், 10 நிமிடம் என்று ஏற்படும் மின்வெட்டுக்களைச் சேர்த்தால் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு இருப்பது இல்லை. அதனால் மக்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
நோயாளிகள் அவதி
தேனி மாவட்டத்தில் இரவு, பகல் எல்லா நேரமும் மின் தட்டுப்பாடு இருக்கிறது. குழந்தைகள், வயோதிகர்கள் இரவு நேரங்களில் தடைப்படும் மின்சாரத்தால் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மருத்துவமனைகளின் நிலைமையும் இதுதான். விவசாயிகளின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.
கணக்கு சொல்றாங்கப்பா கணக்கு
ஆனால் மின்வெட்டு முற்றிலும் தீர்க்கப்படும் என்று முதல்வர் அறிக்கை விடுகிறார். அதை மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் ஆமோதிக்கிறார். டாக்டர் ராமதாஸோ நிலவரத்தை புட்டு புட்டு வைத்து அறிக்கையில் தாக்குகிறார். ஆனால் தமிழக மக்களோ புழுக்கத்தில் தவிக்கின்றனர்.
சார் கரண்ட் எப்ப வரும்
மின் தடை ஏற்பட்ட உடன் மின்சார துறைக்கு போன் செய்து ஈ.பி ஆபிசுங்களா? கரண்ட் எப்ப சார் வரும்? என்று கேட்டாலோ? எங்களுக்கே தெரியலையே என்ற பதில்தான் வருகிறது. சில சமயம் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுகிறார்கள்.
முழு கரண்டும் எப்ப விடுவீங்க முதல்வரம்மா?