அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜூக்கு கொலை மிரட்டல்
மர்மநபர்கள் நடிகர் ஆனந்தராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜுக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் திடீரென அறிவித்தார். மேலும், ஜெயலலிதாவால் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து அதிமுகவுக்கு ஒரு தலைமையை காட்டுகின்றனர். அது ஏற்புடையதாக இல்லை.

பொன்னையன், செங்கோட்டையன் பேச்சு வருத்தம் அளிக்கிறது. சசிகலா பொறுப்பேற்க இது தகுதியான நேரமில்லை. ஜெயலலிதா உடன் சசிகலாவை ஒப்பிட்டு பேசக்கூடாது. அதிமுக தொண்டர்களின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஆனந்தராஜ் கூறியிருந்தார். அதிமுகவில் சசிகலா முன்னிலைப்படுத்துவதைக் கண்டித்து அதிமுகவில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் ஆனந்தராஜுக்கு தொலை பேசி மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications