பஞ்சாயத்து காத்திருக்கிறது.. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் என்று தாக்கலாகிறது தெரியுமா?
தமிழக சட்டசபை சபாநாயகர் மீது திமுக கோரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் 23-ஆம் தேதி விவாதம் நடத்தப்படுகிறது.
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது திமுக கோரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி கொண்டு வந்தார். முன்னதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் திமுக கோரியது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவையில் கடும் அமளி ஏற்பட்டது. தனபாலுக்கும், திமுக உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

சட்டை கிழிப்பு
இதனால் மைக்குகள் உடைக்கப்பட்டு திமுக உறுப்பினர்கள் குண்டுகட்டாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். தனபாலுடனான தகராறின்போது மு.க.ஸ்டாலினின் சட்டைக் கிழிந்ததாக கூறப்பட்டது.

வாக்கெடுப்பில் வெற்றி
பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எடப்பாடிக்கு 122 எம்எல்ஏ-க்கள் ஆதரவு அளித்ததாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். முன்னதாக ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து தான் தாக்கப்பட்டதாக புகார் அளித்தார். மெரினாவுக்கு சென்று போராட்டம் தொடங்கியபோது ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

திமுக கோரிக்கை
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என திமுக கோரியது. எனினும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

23-இல் விவாதம்
தமிழக பேரவை கூட்டத் தொடர் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதுகுறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார். இந்நிலையில் வரும் 23-ஆம் தேதி சபாநாயகருக்கு எதிராக திமுக கோரிய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications