வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை- தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 12ஆம் தேதி கரையை கடந்த வர்தா புயலால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை மாநகரே சின்னாபின்னமானது. 10 நாட்களுக்கு மேலாகியும் பல இடங்களில் மின் விநியோகம் சீராகவில்லை. தகவல் தொடர்பு, இன்டர் நெட் இணைப்புகள் இன்னும் சீரடையவில்லை.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன்காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.