பாமக நிறுவனர் ராமதாஸை எலியோடு ஒப்பிட்டு சீண்டும் 'எம்ஜிஆர் அம்மா பேரவை' தீபா
சென்னை: அதிமுகவில் உள்ள உண்மைத் தொண்டர்கள் 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை'யில் வந்து இணைய வேண்டுமென அக்கட்சியின் நிறுவனர் ஜெ.தீபா அழைப்பு விடுத்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில்தான், ராமதாசை எலி என்று வர்ணித்துள்ளார் தீபா.
ஊழல் பெருச்சாளிகள் ஊரை ஏமாற்றுவதற்காக இரு அணிகள் இணைப்பு என்ற தொடர் நாடகத்தை ஊடங்கங்கள் வாயிலாக நிறைவேற்றிவருவதை நாட்டு மக்கள் எள்ளி நகையாடி வருகிறார்கள் என்று பன்னீர்-எடப்பாடி தரப்பை வாறியுள்ளார் தீபா.
தற்போது தினகரன் கைது சம்பவத்தை திசை திருப்புவதற்காக அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர் கிளிப்பு, அகற்றம் என்ற ஓரங்க நாடகத்தை இரு அணிகளும் நடத்தி வருவதை புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் உண்மைத் தொண்டர்கள் இவர்கள் நாடகத்தை கண்டு ஏமாறமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராமதாஸ் எலியாம்
பிறகு அவர் கூறியதுதான் சூட்டை ஏற்ற காரணம். "தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் போன்றோர்கள் இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று அறிக்கை விடுவது கண்டனத்திற்குரியதாகும். எம்ஜிஆர் அவர்களால் கண்டெடுத்த இரட்டை இலை பல வெற்றி சரித்திரத்தை உருவாக்கியுள்ளது.

என்கிட்ட வாங்க
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இரட்டை இலை மூலம் பல அரசியல் திருப்புமுனைகளை ஏற்படுத்தி தொடர் வெற்றி சரித்திரத்தை நம் கையில் கொடுத்து சென்றுள்ளார். எடுத்தேன் கவிழ்ப்பேன் என்ற பாணியில் ராம்தாஸ் போன்றவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள மாபெரும் இயக்கத்தையும் சின்னத்தையும் பேசுவது புலியைப் பார்த்து எலி எக்காளம் விடுவது போன்றதாகும். ஆகவே, விரைவில் உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் எனது தலைமையில் ஒருங்கிணைந்து அம்மா அவர்களின் 2023 தொலைநோக்கு கனவுத் திட்டத்தை நனவாக்க அயராது உழைப்போம்".

போராட்டம்
மனமாச்சீரியங்களை புறந்தள்ளுவோம், இரு ஊழல் அணிகளை அப்புறப்படுத்துவோம். அம்மாவைப் போன்று தாய் உள்ளதோடு அம்மாவின் தொண்டர்களை அன்புடன் அழைக்கிறேன். தமிழகத்தில் தற்போது இருள் சூழ்ந்துள்ளது தமிழக அரசு நிலைத்தன்மை இல்லாததால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னை தலைநகரிலே மின்சாரம் இல்லை, வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளது. காவேரியில் தண்ணீர் இல்லை, வைகை வறண்டு விட்டது, தாமிரபரணி தண்ணீர் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் வீதிக்கு வந்து பினாமி சசிகலா அரசை எதிர்த்து போராடவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது

தாய் உள்ளம்
இச்சூழ்நிலையில் தமிழகத்தை ஒளிமயமாக்க அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு தமிழக மக்களுக்கு எனது தலைமையில் பொற்கால ஆட்சியை ஏற்படுத்தித்தர அனைவரையும் தாய் உள்ளதோடு மீண்டும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் ராமதாசை சீண்டியதோடு, ஜெயலலிதா பாணியில் தாயுள்ளத்தோடு அழைப்பதாக ஒரு வரியையும் சேர்த்துள்ளார் தீபா. அறிக்கை எழுத ஆளை நியமித்துவிட்டார் என சிரிக்கிறார்கள் அவரின் கணவர், மாதவன் தரப்பினர்.












Click it and Unblock the Notifications