ஜெயலலிதா போல புடவை கட்டி, பொட்டு வைத்து அரசியல்வாதியாக மாறிய தீபா...
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று அவரது அத்தையைப் போல புடவை கட்டி பொட்டு வைத்து தனது தோற்றத்தை மாற்றியிருந்தார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாதாரணமாக வலம் வந்த சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட பின்னர், நடை, உடை பாவனைகளை மாற்றிக்கொண்டார்.
சசிகலாவை எதிர்க்கும் சிலர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்ததோடு அவர் பெயரில் பேரவையும் துவங்கினர்., தீவிர உறுப்பினர் சேர்க்கையும் நடந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளிலும் தீபா பேரவை என்ற பெயரில் கட்அவுட், போஸ்டர், பேனர்களை வைத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே தீபாவின் ஆதரவாளர்கள் திநகரில் இருக்கும் அவர் வீட்டின் முன்னால் திரண்டு அவர், அரசியலுக்கு வர வேண்டும் என்று முழக்கமிட்டனர். அவர்களிடம் பேசி வருகிறார் தீபா.
இன்று காலை 6.30மணிக்கு தி நகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அரசியலில் அடி எடுத்து வைக்கும் தீபா அவரது அத்தை ஜெயலலிதாவின் தோற்றத்திற்கு மாறியுள்ளார். ஜெயலலிதா போல கழுத்து, கைகள் வரை மூடிய சேலை அணிந்து நெற்றியில் பொட்டு வைத்திருந்தார். கொண்டை போட்டு அச்சு அசலாக அத்தையைப் போல மாறியிருந்தார் தீபா.
இதற்காக ஜெயலலிதாவின் விடியோக்களை மீண்டும் மீண்டும் போட்டுப்பார்த்து அவரது நடை, உடை, பாவனைகளை அச்சு அசலாக அப்படியே பிரதிபலிக்கும் பயிற்சிகளை தீபா எடுத்துள்ளாராம்.
இதுநாள் வரை சுடிதார் அணிந்து பொட்டு வைக்காமல் செய்தியாளர்களையும், மக்களையும் சந்தித்து வந்த தீபா தற்போது திடீரென தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications