ஜெ. சமாதியில் வைத்து கட்சி ஆரம்பித்தார் மாதவன்.. "எம்ஜெடிஎம்கே".. இதாங்க பேரு!
தீபாவின் கணவர் மாதவன் எம்ஜெடிஎம்கே என்ற புது கட்சியை தொடங்கியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு மாற்று தான்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் எம்ஜெடிஎம்கே என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். ஜெயலலிதா சமாதிக்கு சென்று கட்சியையும், கொடியையும் அறிமுகம் செய்த அவர், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப தான்தான் சரியான ஆள் என்றும் மாதவன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிளவு பட்டுள்ளது. ஒபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்தனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பின்னாள் ஒரு சிலர் சென்றனர். இதனால் எம்ஜிஆர். அம்மா தீபா பேரவையை தொடங்கினார் தீபா.
தீபா கணவர்
ஆரம்பத்தில் அவரது கணவர் மாதவனும் தீபா பேரவையில் இருந்தார். நிர்வாகிகள் நியமனத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் தீபா பேரவையில் இருந்து வெளியேறிய மாதவன் புதுக் கட்சி துவங்கப் போகிறேன் என்று அறிவித்தார். ஊர் ஊராக வலம் வந்தார். மாதவன் தீபா என்றும் பெயரை மாற்றினார்.
மனைவியுடன் சமாதானம்
ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் படகுச் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார் தீபா. இதனையடுத்து பிரச்சாரம் செய்ய வந்தார் மாதவன். இடைத்தேர்தல் ரத்தாகவே மாதவன் தீபா இடையேயான சண்டை மீண்டும் முற்றியது.
வீட்டை விட்டு வெளியேற்றிய தீபா
கடந்த வாரம் தீபா மற்றும் அவரது கணவருக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. இதில் மாதவனை, தீபா வீட்டை விட்டு வெளியேற்றினார். பல மணிநேரம் வீட்டிற்கு வெளியே காத்திருந்தும் கதவை திறக்கவில்லை. இதனால் இரு ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர். இதில் சிலருக்குக் காயம் ஏற்பட்டது.
மாதவனின் புதிய கட்சி
இந்நிலையில், தீபா கணவர் மாதவன், புதிய கட்சியை ஜெயலலிதா சமாதியில் ப துவங்க உள்ளார். அப்போது, கட்சியின் கொடி மற்றும் பெயரை அவர் அறிமுகப்படுத்தி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
எம்ஜிஆர் - ஜெயலலிதா கொடி
மாதவனின் கட்சிக்கொடியில் கருப்பு. சிவப்பு நடுவில் வெள்ளை அதில் எம்ஜிஆர். ஜெயலலிதா புகைப்படம் இடம் பெற்றுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை வைத்து இன்னும் எத்தனை பேர் கட்சி தொடங்கி பிழைப்பு நடத்துவார்களோ தெரியலையே?
வெற்றிடத்தை நிரப்புவேன்
செய்தியாளர்களிடம் பேசிய மாதவன், ஜெயலலிதாவின்கொள்கைதான் எனது கொள்கையும், ஜெயலலிதா, எம்.ஜிஆர் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவினர் இரண்டாக பிரிந்து அடித்துக் கொள்கின்றனர். அனைவரையும் ஒருங்கிணைப்பேன். என்னால்தான், அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும். அதனால் புது கட்சி துவங்குகிறேன் என்று சிரிக்காமல் கூறியுள்ளார் மாதவன்.