தீபா ஒரு ஏமாற்றுப் பேர்வழி.. வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் சரமாரி குற்றச்சாட்டு
தீபா ஒரு ஏமாற்றுப் பேர்வழி என வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: தீபா ஒரு ஏமாற்றுப பேர்வழி என வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது அண்ணன் மகளான தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார். அவ்வப்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை கிளப்பி வந்தார்.
இந்நிலையில் தீபா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் நிர்வாகியான வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அண்மையில் பேரவையில் இருந்து விலகினார். அ.தி.மு.க. சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அ.தி.மு.க.வில் தீபா அணியைச் சேர்ந்த எங்களுக்கும் சின்னத்தில் உரிமை உண்டு என்று கூறி அவரது தரப்பில் தேர்தல் ஆணையத்தில் 5,50,000 பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
விலகலுக்கான காரணம்
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது தீபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெறுவதாகக் கூறப்பட்டதாகத் தெரிகிறது. இதுவே வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் விலக காரணம் என கூறப்பட்டது.
ஏன் வழக்கு தொடரவில்லை?
இந்நிலையில் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் தொடர்பாக தீபா ஏன் வழக்கு தொடரவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.
பேனா மட்டும் போதும்
ஆனால் போயஸ்கார்டனை சொந்தமாக்கிக்கொள்ள மட்டும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார். ஜெயலலிதா பயன்படுத்திய பேனா மட்டும் போதும் என்ற தீபா, எதற்காக ஜெயலலிதாவின் சொத்துக்கு ஆசைப்படுகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேண்டியவர்களிடம் வாங்கிவிட்டனர்
இரட்டை இலையை தங்களுக்கு வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அவர் திடீரென தனது டிரைவர் மூலம் வாபஸ் பெற்றார் என்றும் பசும்பொன் பாண்டியன் குற்றம்சாட்டினார். தீபாவும் தீபக்கும் வாங்க வேண்டியவர்களிடம் வாங்கிவிட்டனர் என்றும் பசும்பொன் பாண்டியன் சாடினார்.
தீபா ஒரு ஏமாற்றுப் பேர்வழி
மேலும் தீபா ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்றும் அவர் விமர்சித்தார். மேலும் தீபா பேரவையில் சேர்ந்தவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்காமல் தீபா ஏமாற்றி விட்டார் என்றும் பசும்பொன் பாண்டியன் குற்றம்சாட்டினார்.