சசி முதல்வராக எதிர்ப்பு.. கவர்னர் மாளிகை முற்றுகை.. தீபா ஆதரவாளர்கள் 20 பேர் கைது
சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் மாளிகையை தீபா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: இன்னும் 2 நாட்களில் சசிகலா தமிழகத்தின் முதல்வராக உள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தமிழகத்தில் உருவாகியுள்ள நிலையில், தீபா ஆதரவாளர்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
சசிகலா தமிழகத்தின் முதல்வராகும் வகையில் சட்டசபைக் குழு தலைவராக நேற்று அதிமுக எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, ஒரு வார்டு உறுப்பினராகக் கூட இல்லாத சசிகலா எப்படி தமிழ்நாட்டின் முதல்வராக முடியும் என்று தமிழகம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கனவே, ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலாவின் தலைமையை அதிமுகவின் தொண்டர்கள் பலர் ஏற்காமல் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் ஆதரவாளர்களாக மாறினார்கள். அவர்கள் அனைவரும் சசிகலாவை எதிர்த்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில், சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து தீபா ஆதரவாளர்கள் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது சசிகலாவை எதிர்த்து கோஷங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தடுத்து நிறுத்திய போலீசார், தீபா ஆதரவாளர்கள் 20 பேரை கைது செய்துள்ளது.