ஆம் ஆத்மியில் சேருங்கள் அல்லது கூட்டணி வையுங்கள்.. கமலிடம் 'துண்டுபோடும்' கேஜ்ரிவால்?
கமல்ஹாசனை ஆம் ஆத்மியில் இணைய அழைப்பு விடுப்பதற்காக அரவிந்த் கேஜ்ரிவால் சென்னை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
Recommended Video
சென்னை: அரசியலுக்கு வரத் துடிக்கும் கமல்ஹாசனை ஆம் ஆத்மி கட்சியில் இணைத்து கொள்ள அழைப்பு விடுப்பதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னை வந்துள்ளதாக தெரிகிறது.
சமீபகாலங்களாக நடிகர் கமல்ஹாசன் ஆட்சியாளர்கள் மீதுள்ள வெறுப்பால் அரசியல் பேசி வருகிறார். மேலும் மறைமுகமாக ஆட்சியாளர்களை சாடி வந்த நிலையில் கடந்த சுதந்திர தினத்தன்று முதல் நேரடியாக தாக்கத் தொடங்கினார்.
இதனால் ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கும் ஆளான அவர் தனி கட்சியை தொடங்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். தமிழகம், கேரளம் இரு மாநிலங்களிலும் ஆட்சி பொறுப்பேற்று சற்று முன்பின்னாக ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
கேரள முதல்வர்
இதற்கு தமிழகத்தை விடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நடிகர் கமல் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயனை கேரள மாநிலத்துக்கு சென்று சந்தித்தார் கமல்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கமல் கலந்து கொள்வதாகவும் அவர் அக்கட்சியில் இணையவுள்ளதாகவும் பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில் நடிகர் கமலை சந்தித்து பேச இன்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சென்னை வந்தார்.
ஆம் ஆத்மியில் இணைப்பு
சென்னை விமான நிலையத்தில் கேஜர்வாலை வரவேற்று வீட்டுக்கு அழைத்து சென்றார் கமலின் மகள் அக்ஷராஹாசன். வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரான கமல்ஹாசனை இடதுசாரி கொள்கையை கடைபிடிக்கும் தனது கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தவே டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சென்னை வந்துள்ளாதாக தெரிகிறது.
தென்னகத்தில் தேவை
டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கணிசமான செல்வாக்கு வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு தென் மாநிலங்களில் வேர் இல்லை. கமலை பயன்படுத்தி ஆம் ஆத்மியை தமிழகத்தில் வளர்க்க கேஜ்ரிவால் விரும்புவதாக தெரிகிறது. தனிக்கட்சி துவங்க கமல் உறுதியாக இருந்தால் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள இப்போதே துண்டு போட்டுவிடலாம் என்று நினைக்கிறாராம் கேஜ்ரிவால்.