டெங்கு காய்ச்சல்: தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருக்கிறதாம் - டெல்லியில் ஆட்டுப்பால் விற்பனை அமோகம்…
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் டெங்கு நோயின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஆட்டுப்பால் பாக்கெட் அமோகமாக விற்பனையாகி வருகிறது.
டெல்லியில் டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது .நேற்று மாலையுடன் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

டெங்கு நோயை தடுப்பில், அலோபதி மருந்துகளை காட்டிலும், ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவமே அதிகளவில் உதவி புரிகின்றன என்பதை மக்கள் உணரத்துவங்கிவிட்டனர்.
நோய் தடுப்பில் பப்பாளி இலைச்சாறு, ஆட்டுப்பால் போன்றவை முக்கிய பங்காற்றுகின்றன என்பதால், தற்போது டெல்லியில் அதற்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
அந்தந்த மாநிலங்களில், அரசே பால் விற்பனை செய்துவரும் நிலையில், டெல்லியில், தற்போது ஆட்டுப்பால் பாக்கெட் விற்பனை சக்கைப்போடு போட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் டெங்கு
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 2300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெங்கு கட்டுப்பாடு
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது கோவில்பட்டி சட்டசபைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜூ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘இந்தியாவின் தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சித்த மருந்துகள் தயார்
நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறு ஆகிய சித்த மருந்துகள் மூலம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது'' என்று கூறியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.












Click it and Unblock the Notifications