தொப்பி சின்னம் ஒதுக்கக்கோரிய தினகரனின் மனு தள்ளுபடி. டெல்லி ஹைகோர்ட் அதிரடி!
தொப்பி சின்னத்தை ஒதுக்கக்கோரிய டிடிவி தினகரனின் மனுவை டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி: தொப்பி சின்னத்தை ஒதுக்கக்கோரிய டிடிவி தினகரனின் மனுவை டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. தினகரனுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இரட்டை இலைச்சின்னம் மற்றும் கட்சியை தேர்தல் ஆணையம் அண்மையில் ஈபிஎஸ் ஓபிஎஸ் அணிக்கு வழங்கியது. இதற்கு தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என தினகரன் தரப்பு குற்றம்சாட்டியது. மேலும் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.
இரண்டு வழக்குகள்
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. மேலும் தனக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் எனவும், சின்னம் தொடர்பாக இன்றே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தினகரன் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது.
தொப்பி சின்னம் வழக்கு
இந்த வழக்கு அவசர வழக்காக டெல்லி ஹைகோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தொப்பி சின்னம் ஒதுக்குவது தொடர்பான மனு மட்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சுயேட்சை சின்னம் ஒதுக்கப்படும்
தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவது தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், தினகரன் எந்த அரசியல் கட்சிசிலும் இல்லை. அவர் சுயேட்சை வேட்பாளர் மட்டுமே. அதன் அடிப்படையிலேயே அவருக்கு சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தே.ஆ என்ன இழப்பு?
இதையடுத்து அதிமுக விவகாரத்தில் எந்த அணியை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறது? தொப்பி சின்னத்தை தினகரன் பயன்படுத்தினால் தேர்தல் ஆணையத்திற்கு என்ன இழப்பு என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
தேர்தல் அதிகாரியைதான் அணுகனும்
அதற்கு குறிப்பிட்ட சின்னம் கிடைக்காத அத்தனை பேரும் நீதிமன்றத்தை அணுகினால் என்ன செய்வீர்கள்? என முதல்வர் அணி வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர். சின்னம் தொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியைதான் தினகரன் அணுக வேண்டும் என்றும் முதல்வர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஏன் எதிர்க்க வேண்டும்?
தொப்பி சின்னம் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்புக்கு உரிமையில்லை என்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு இரட்டை இலைச்சின்னம் கிடைத்த பின்பும் தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைப்பதை எதிர்ப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?
மேலும் சின்னம் தொடர்பாக இன்றே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தினகரன் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு, தினகரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கபில் சிபல், வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.
தொப்பி சின்னம் கிடைக்குமா?
இதைத்தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்குவது இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தொப்பி சின்னம் ஒதுக்கக்கோரிய தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
தினகரனுக்கு மீண்டும் பின்னடைவு
மேலும் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்றும் டெல்லி ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆர்கேநகர் தேர்தலில் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்காது என உறுதியாகியுள்ளது. இது டிடிவி தினகரனுக்கு மீண்டும் ஒரு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.