அதிமுக கோஷ்டிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் இவைதான்
அதிமுக கோஷ்டிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் இன்று இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்த ஒரு பார்வை.
சென்னை: அதிமுக கோஷ்டிகள் இணைப்பு பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சில முக்கிய அம்சங்களை முன்வைத்துதான் இப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி கோஷ்டிகள் இன்று அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இணைப்பு பேச்சுவார்த்தையை நடத்துகிறது. இப்பேச்சுவார்த்தைக்கு அதிமுகவில் சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருந்தபோதும் டெல்லி நெருக்கடியால் வேறுவழியில்லாமல் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெற உள்ளது. இப்பேச்சுவார்த்தையில் சில முக்கிய அம்சங்கள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர், பொதுச்செயலர்
முதல்வர் பதவி, பொதுச்செயலர் பதவி யாருக்கு என்பது முதலில் பேசப்படுகிறது. டெல்லி பார்முலாபடி ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும். ஆனால் எடப்பாடி கோஷ்டி இதில் பிடிவாதம் காட்டி வருகிறது.
அவைத் தலைவர், பொருளாளர்
அதிமுக அவைத் தலைவர் பதவி, பொருளாளர் பதவியை ஓபிஎஸ் தரப்பு கோருகிறது. இதிலும் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி விட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை.
அமைச்சர்கள்
ஓபிஎஸ் அல்லாமல் மேலும் 2 பேருக்கு அமைச்சர் பதவி தரப்பட வேண்டு என்பது ஒரு கோரிக்கை. அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கு மட்டுமே அமைச்சர் பதவி தரலாம் என்பது எடப்பாடி கோஷ்டி திட்டம்.
து.பொ.செ. பதவிகள்
புதியதாக 2 துணைப் பொதுச்செயலர் பதவி உருவாக்கலாம் என்பது இருதரப்பின் ஒருமித்த கருத்து. இரண்டு கோஷ்டிகளிலும் தலா ஒருவர் துணைப் பொதுச்செயலராக்கப்பட உள்ளனர்.
பேனர் நீக்கம்
பேச்சுவார்த்தைக்கு முன்னரே சசிகலா, தினகரன் பேனர்களை நீக்க வேண்டும் என்பது ஓபிஎஸ் கோஷ்டி நிபந்தனை. இதனை ஏற்பதாக எடப்பாடி தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது.
வைத்தியலிங்கம் பொதுச்செயலர்?
புதிய பொதுச்செயலராக வைத்தியலிங்கம் எம்பியை தேர்வு செய்யலாம் என்பது எடப்பாடி கோஷ்டியின் நிலைப்பாடு. ஆனால் ஓபிஎஸ் அணியோ கேபிமுனுசாமி அல்லது பிஹெச் பாண்டியனுக்கு அப்பதவியை தரவேண்டும் என்கிறதாம்.
ஜெ. மர்ம மரணம்
ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை கோரி தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும் என்பது ஓபிஎஸ் கோஷ்டி நிபந்தனை. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதன்முடிவின் படி செயல்படலாம் என்பது எடப்பாடி கோஷ்டி நிலைப்பாடு.