தூத்துக்குடியில் டெங்கு பாதிப்பில் மக்கள்: தூங்கும் சுகாதாரத் துறை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சுகாதாரத் துறை சரியாக வேலை செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பருவ மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் பல தெருக்கள் மத்தியில் சாக்கடை நீருடன் மழை நீர் தேங்கியுள்ளது. ஆனால் இதுவரை சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி உள்ளிட்ட நிர்வாகம் சார்பில் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக மழை நீர் தேங்கும் பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்படவில்லை, கிருமி நாசினி பவுடர் தூவப்படவில்லை. இந்த காரணத்தால் மாவட்டத்தில் 60 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடியுள்ளனர். இவர்களில் பலர் புற நோயாளியாக சிகிச்சை பெற்று விட்டு வீடு திரும்பியுள்ளனர்.
டெங்க அறிகுறி தெரிந்த 10 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில நான்கு பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தூத்துக்குடி அந்தோணியர்புரம் பகுதியை சேர்ந்த பெண் உள்பட 3 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அங்குள்ள தனியார் மருத்துவனையிலும் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் டெங்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. ஆனால் சுகாதாரத் துறையினர் போதிய அக்கறை காட்டாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.