எனக்கு டெங்கு காய்ச்சல் இல்லை: சந்தோசப்படும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
எனக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என்று சந்தோசமாக தெரிவித்துள்ளார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
புதுக்கோட்டை: எனக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என்று சந்தோசமாக தெரிவித்துள்ளார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். டெங்குவை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு கட்ட தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று மாலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதையொட்டி எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சியை செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும்போது, தமிழகத்தில் இன்று முதல் டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு 40 விநாடிகளில் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் எனக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் எனக்கு டெங்கு காய்ச்சல் இல்லை. இதனால் மகிழ்ச்சியாக உள்ளேன்.
டெங்கு காய்ச்சல் என்னை பாதிக்காததால் சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு கட்ட தீவிர நடவடிக்கைகளை மும்முரமாக எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.