தமிழகத்தில் டெங்கு: ஓ.பி.எஸ். தலைமையில் அவசர ஆலோசனை, ஹெல்ப்லைன் எண் வெளியீடு
சென்னை: மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நத்தன் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, விஜயபாஸ்கர் அரசின் தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மழைக்காலங்களில் காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணமாக விளங்கும் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகவும், டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
காய்ச்சலை கட்டுப்படுத்த, கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்தது, ஒரு வட்டாரத்திற்கு 1- மஸ்தூர்கள் சுகாதாரத் துறை மூலமாகவும், தேவையான நபர்கள் ஊரக வளர்ச்சித் துறை மூலமாகவும், தேவைக்கேற்ப கூடுதல் பணியாளர்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கொசு உற்பத்தியை தடுக்க தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் வழங்கப்பட்டுள்ளது.
எலிசா முறையில் டெங்குவை கண்டுபிடிக்க மாவட்ட அளவில் சோதனை மையங்கல் செயல்பட்டு வருகின்றன. இந்திய முறை மருந்துகள், பாரம்பரிய மருத்துவ முறைகளை (நிலவேம்புக் குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு அருந்துதல்) ஊக்குவித்து அவை அரசு ஆஸ்பத்திரிகளில் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பூச்சியியல் கண்காணிப்பு அறிக்கையின் அடிப்படையில் தக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ரத்த அணுக்கள் பரிசோதனை கருவி, மருந்துகள், இரத்த கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
குறும்படம் மற்றும் பிளம்பரங்கள் மூலம் கொசு உற்பத்தியை தடுக்க மக்களின் பங்கு குறித்தும், அரசு மேற்கொண்ட்டுள்ள நடவடிக்கைகள் குறதி்தும் மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன. \தேவையான இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காய்ச்சல் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
காய்ச்சல் இருக்கும் இடங்களில் காய்ச்சல் குறித்த விவரங்களை 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 9444340496 மற்றும் 9361482898 எண்கள் மூலமும், 044-24350496 மற்றும் 044-24334810 தொலைபேசி எண்கள் மூலமும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள உபயோகமற்ற பொருட்களில் தேங்கியுள்ள நீரிலேயே டெங்குவை உருவாக்கும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே பொதுமக்கள் தண்ணீரை தேங்க விடாமல் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.