லீவு மறுக்கப்பட்டதால் ஐ.சி.எப் ஊழியர் தற்கொலை: தொழிலாளர்கள் போராட்டம்
சென்னை: அதிகாரிகளின் சித்ரவதைகளினாலும், வேலைப்பளு, கந்து வட்டி கொடுமையாலும் கடந்த ஐந்தாண்டுகளில் ஐசிஎப் ரயில்வே ஊழியர்கள் 309 பேர் பலியாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே விடுமுறையை நீட்டிக்க மறுத்த காரணத்தால் குகன் என்ற ஐ.சி.எப் ஊழியர் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐசிஎப் தெற்கு காலனியை சேர்ந்தவர் குகன் (38), ஐசிஎப் செல் பிரிவில் கலாசியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி பிரசவத்துக்காக புதுச்சேரியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன், இவருக்கு குழந்தை பிறந்தது. மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக 10 நாள் விடுப்பு எடுத்த குகன், நேற்று காலை விடுமுறை முடிந்து வேலைக்கு திரும்பினார். அப்போது, தனக்கு விடுமுறையை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், குகன் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில், ஒர்க் ஷாப்புக்குள் தொழிலாளர்கள் சென்றபோது, அங்கு குகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே உயிரிழந்து விட்டார்.
ஐசிஎப் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, குகன் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, ஐசிஎப் நிர்வாகத்தை கண்டித்து 200க்கும் மேற்பட்ட சக ஊழியர்கள் ஒர்க் ஷாப்பில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம், போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
தொடர்கதையாகும் தற்கொலைகள்
சென்னை வில்லிவாக்கத்தை அடுத்த ஐ.சி.எப். ரயில்வே குடியிருப்பில் தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 1 ஆம் தேதி ஐ.சி.எப். ரயில்வே குடியிருப்பு தெற்கு காலனியில் குடியிருந்த விஜயகுமார் என்ற ஊழியர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு கந்து வட்டிக் கொடுமையும், வேலைப்பளுவும் காரணம் என்கின்றனர் சக ரயில்வே ஊழியர்கள்.
பணிச்சுமை அதிகரிப்பு
ஐ.சி.எப்.பில் கடந்த சில ஆண்டுகளாக ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. பணிச்சுமையை சமாளிக்க முடியாமலும், அதிகாரிகளின் தொடர் அழுத்தம் காரணமாகவும் ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்வதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
307 பேர் தற்கொலை
ரயில்வே ஊழியர்களின் தற்கொலை குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சேகுவாரா ஜெய்சங்கர் என்பவர், ஐ.சி.எப். ரயில்வே நிர்வாகத்திடம் தகவல் கேட்டுள்ளார். இதற்கு கடந்த 2010 ஜனவரியிலிருந்து இதுவரை 307 ரயில்வே ஊழியர்கள் இறந்துள்ளதாக ஐ.சி.எப். ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இந்த பதில் கடிதம் வந்தப்பிறகு 2 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்குமா?
ஐ.சி.எப்.பில் இருந்து உற்பத்தியாகும் ரயில் பெட்டிகள் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உற்பத்தியை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் அதிக முனைப்புடன் செயல்படுகிறது. அதேசமயம் தொடர் கதையாகும் ஐ.சி.எப். ரயில்வே ஊழியர்கள் தற்கொலையை தடுக்க ரயில்வே நிர்வாகமும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.