குற்றவாளி ஜெயலலிதா பெயரில் இருசக்கர வாகனத் திட்டமா?: அன்புமணி காட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ஜெயலலிதாவின் பெயரில் மக்கள் நலப் பணிகளா என அன்புமணி ராமதாஸ் எதிர்த்துள்ளார்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதா பெயரில் இருசக்கர வாகனத் திட்டத்தை செயல்படுத்துவது கண்டனத்துக்குரியது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
தமிழகத்தின் புதிய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி சில புதிய அறிவிப்புகளை திங்களகிழமை (இன்று) வெளியிட்டார். அதில் தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும், உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க 50% மானியம் வழங்கப்படும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான நிதி உதவி இரு மடங்காக உயர்த்தப்படும் ஆகியவை முக்கியமானவைகளாகும்.

இதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், எடப்பாடி பழனிசாமி அரசின் திட்டங்களால் பல்வேறு சாதக, பாதகங்கள் இருந்தாலும் இத்திட்டங்கள் அனைத்துமே சசிகலாவின் பினாமி அரசு மீது மக்களுக்கு உள்ள கொந்தளிப்பை தணிப்பதற்கான முயற்சியாகவே கருதப்படுகிறது.
இனி வரும் 4 ஆண்டுகளுக்கு தங்குதடையின்றி நடைபெறும் ஊழல்களை மக்கள் எதிர்க்கக் கூடாது என்பதற்காக பினாமி அரசால் வழங்கப்பட்ட லஞ்சமாகவே பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 7,000 மதுக்கடைகள் இருக்கும் நிலையில், தற்போது மேலும் 500 கடைகளை மூடுவதாக அறிவிப்பதில் பலனில்லை. இந்த எண்ணிக்கையில் மதுக்கடைகளை மூடி ஆமை வேகத்தில் சென்றால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மேலும் 14 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் சென்று வரும் பெண்கள் அனைவருக்கும் இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்பது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியாகும். ஆனால், இந்தத் திட்டத்திற்கு "அம்மா இருசக்கர வாகனத் திட்டம்" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பெயரில் நலத்திட்டங்களை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
எடப்பாடி அரசின் ஏமாற்று அறிவிப்புகள் மூலம் மக்களிடம் நற்பெயரை பெற்றுவிட முடியாது. வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழக மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பதிலடி கொடுப்பர் '' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications