கரூர் கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
கரூர்: கரூர் அருகே மேட்டுமகாதானபுரத்தில் பக்தர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்துள்ள மேட்டுமகாதானபுரத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீமஹாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலை குலதெய்வமாக கொண்ட இரண்டு சமூகத்தினரும் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 19ஆம் தேதி இத்திருவிழாவை நடத்துகின்றனர்.

இந்த திருவிழாவிற்கு கரூர், திருச்சி, திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மஹாலட்சுமி அருள்பெற்று செல்கின்றனர்.

ஆடி பெருக்கினை முன்னிட்டு நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தலையில் தேங்காய் உடைத்து ஸ்ரீமஹாலட்சுமிக்கு நேர்த்திகடன் செலுத்தியும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடி முதல் நாளிலிருந்து ஆடி 18 வரை விரதம் இருந்த நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கோவில் முன்பாக வரிசையாக அமர்ந்து கொண்டு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

பக்தர்களை வரிசையாக வரச் செய்து பூசாரி அவர்களது தலையில் தேங்காயை உடைத்தார். இதுபோன்று தலையில் தேங்காய் உடைத்துகொள்வதன் மூலம் தாங்கள் நினைத்த காரியம் நடப்பாதாகவும் அதற்கு நன்றி கடனாக இந்த தலைதேங்காய் உடைத்து கொள்வதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications