கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி மறுப்பு.. நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்.. பரபரப்பு!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த பக்தர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் உள்ள பகுதிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது ஆடி மாதம் என்பதால் ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை போன்ற முக்கிய நிகழ்வுகளில் மக்கள் கூடுவது வழக்கம். எனவே தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..
சட்ட மேலவை: நிறைவேறாத கருணாநிதி முயற்சிகள்..1989 முதல் 2011 வரை நடந்தது என்ன? கே.எஸ். ராதாகிருஷ்ணன்
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
சென்னை மயிலாப்பூர், வட பழனி கோவில்கள், மதுரை மீனாட்சி அமமன் கோவில், தஞ்சாவூர் பெரிய கோவில்,பழனி முருகன் கோவில், ராமேசுவரம் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூன்றாம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவில்
ஆடி அமாவாசை தினமான 8-ம் தேதியும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என திருச்செந்தூர் மாவட்ட நிர்வாகம் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் முருகனை தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை புரிந்தனர். மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு தெரியாததால் இன்று காலை பக்தர்கள் முருகனை தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றனர்.
முறையாக அறிவிக்கவில்லை
ஆனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்களை ரவுண்டானா சாலை நுழைவாயில் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ''கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி இல்லை'' என்று அவர்களிடம் கூறினார்கள். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் ரவுண்டானா சாலை முன்பு திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்களில் தரிசனம் ரத்து தொடர்பாக முறையாக அறிவிக்கவில்லை என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
Recommended Video
போராட்டம்
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருச்செந்தூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ''கோவில் நுழைவாயில் முன்பு வரை அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோபுர தரிசனம் செய்து விட்டு செல்வதாகவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கும் போலீசார் அனுமதி கொடுக்காததால் பக்தர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதன் பின்னர் பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்கள் ஊர்களை நோக்கி திரும்பி சென்றனர்.