சுடச்சுட இட்லி, தோசை, பொங்கல்! பங்காரு அடிகளார் பக்தர்களின் பசி தீர்த்த ஆதிபராசக்தி சித்தர் பீடம்!
செங்கல்பட்டு: பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்களுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் சுடச்சுட தோசை, இட்லி, பொங்கல் என காலை டிஃபன் வழங்கப்பட்டது.
இரவோடு இரவாக வந்த பக்தர்கள்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவும், பக்தர்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான பங்காரு அடிகளார் நேற்று மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுச் செய்தி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள அவரது பக்தர்களை பேரதிர்ச்சி அடைய வைத்தது. இதனிடையே பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இரவோடு இரவாக பேருந்து, வேன் என வாகனங்களை வாடகைக்கு பிடித்து பக்தர்கள் மேல்மருத்துவத்தூரில் வந்து குவிந்துள்ளனர்.

தனியாக நடக்கும் சமையல் பணிகள்: அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மேல்வருத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உரிய முன்னேற்பாட்டுடன் செய்து கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாருக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. பங்காரு அடிகளாரின் பக்தர்கள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக சமையல் மாஸ்டர்களை தனியாக பணியமர்த்தி பக்தர்களுக்கு உணவு தயாரிக்கும் வேலைகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன.
காலை டிஃபன் -மதிய உணவு: காலை டிஃபன் மட்டுமின்றி மதியத்திற்கும் தயிர்சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட வெரைட்டி ரைஸ் வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பங்காரு அடிகளாரின் உடல் அடக்கம் செய்த பிறகே பக்தர்கள் மேல்வருத்தூரில் இருந்து புறப்படுவார்கள் என்பதால் போலீஸார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே பங்காரு அடிகளாரின் உடலை பார்த்ததும் பக்தர்களில் பலர் கத்திக்கதறி தங்கள் துயரத்தை வெளிப்படுத்திய நிகழ்வையும் காண முடிந்தது.
கர்நாடக பக்தர்கள்: பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக பக்தர்களை காட்டிலும் கர்நாடக மாநிலத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் மேல்வருத்தூர் வருகை தந்துள்ளனர். அதேபோல் ஆந்திராவிலிருந்தும் கணிசமான பக்தர்கள் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர். இதனால் சென்னை -திருச்சி சாலையில் உள்ள மேல்வருத்தூர், மக்கள் கடலாக காட்சியளிக்கிறது.












Click it and Unblock the Notifications