ஆளுநர் உத்தரவு எதிரொலி- எம்.எல்.ஏ.க்கள் சிறைவைக்கப்பட்ட ரிசார்ட்டில் டிஜிபி அதிரடி ஆய்வு?
ஆளுநர் உத்தரவு எதிரொலியாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில் டிஜிபி ராஜேந்திரன் சோதனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் ரிசார்ட்டில் டிஜிபி ராஜேந்திரன் ஆய்வு நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக எம்.எல்.ஏக்கள், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்துவிடக் கூடாது என்பதற்காக மன்னார்குடி கோஷ்டியால் 2 நாட்களாக சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு, காவல்துறையிடம் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டிருக்கிறது.
இதனிடையே இன்று தலைமை செயலர், டிஜிபி உள்ளிட்டோரை ஆளுநர் வித்யாசகர் ராவ் அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது எம்.எல்.ஏக்கள் கடத்தல் விவகாரம் குறித்து விவரங்களை ஆளுநர் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு டிஜிபி ராஜேந்திரன் நேரில் சென்று சோதனை நடத்தக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.