யார் மகன் ? மேலூர் தம்பதி வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் மனு !
நடிகர் தனுஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை: தன்னை மகன் என உரிமை கொண்டாடி மேலூர் நீதிமன்றத்தில் வயதான தம்பதி தாக்கல் செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக பணியாற்றியவர் கதிரேசன்(60). அவரது மனைவி மீனாட்சி. கடந்த 2002ம் ஆண்டு பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்த தங்களின் மகன் கலையரசன் தங்களை பிரிந்து சென்றுவிட்டதாகவும், அவர் தான் தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதை தனுஷும் அவரது தந்தையுமான கஸ்தூரி ராஜாவும் மறுத்தனர். இதையடுத்து, கதிரேசன் இது தொடர்பாக மதுரை மாவட்டம் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த டிச. 25-ல் விசாரணைக்கு வந்தபோது, ஜனவரி 12ம் தேதி நடிகர் தனுஷ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜன. 12-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தனுஷ் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை மார்ச் 3-ம் தேதி நீதித்துறை நடுவர் ஒத்திவைத்தார். இந்நிலையில் மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் கூறியிருப்பது அனைத்தும் தவறானது. எனவே அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும், அதுவரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தனுஷ் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தனுஷின் மனுவுக்கு கதிரேசன், மீனாட்சி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப். 8-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications