‘சாகும் வரை உண்ணாவிரதம்’ என்ற அறிவிப்பை திரும்ப பெற்றார் தருமபுரம் ஆதீனம்.. தவறான செய்தி என தகவல்!
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் சார்பில் மயிலாடுதுறையில் தொடங்கப்பட்ட மருத்துவமனையை இடித்தால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தருமபுரம் ஆதீனம் 27-வது சன்னிதானம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் உண்ணாவிரத அறிவிப்பு பதிவு நீக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் மயூரநாதர் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச பிரசவ மருத்துவமனை உள்ளது. இந்த இலவச மருத்துவமனை 1943 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனத்தின் 24வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பிரசவத்தில் இறந்து போன அவரது தாயாரின் நினைவாக ஆதீனத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் பிரசவ மருத்துவமனையை கட்டினார். 1951ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் குமாரசாமி ராஜா இந்த மருத்துவமனையை திறந்து வைத்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல நிலைமையில் இயங்கி வந்த மருத்துவமனை, நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக பழுதடைந்து குப்பை மேடாக மாறிப் போனதாக குற்றம்சாட்டப்படுகிறது. மீண்டும் தர்மபுரம் ஆதீனத்தில் இலவச மருத்துவமனை அமைந்துள்ள இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், மீண்டும் இலவச மருத்துவமனை அமைக்கப்போவதாகவும் தற்போதைய தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த வரமாச்சார்யா சுவாமிகள் கோரிக்கை விடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசிற்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், அந்த மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கப்போவதாகவும், குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டனர். உடனடியாக, தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான மருத்துவமனையை புனரமைத்து வழங்க வேண்டும் என்றும், மருத்துவமனைக் கட்டிடத்தை இடிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம். இல்லையென்றால், தருமபுரம் ஆதீனத்துக்கு ஆதரவாக பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்று அறிவித்தார் அண்ணாமலை.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் விடுத்த அறிக்கையில், இலவச மருத்துவமனையை இடிக்கப் போவதாக செய்தி வந்துள்ளது. அப்படி ஒரு நிகழ்வு ஏற்படுமாயின் நம் முன்னோர்கள் அமைத்த நினைவு அமைப்பினை காக்க சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று அறிவித்தார்.
மருத்துவமனை இடிக்கப்பட்டால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருப்போம் என ஆதீனம் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்திடம், மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கும் எந்த திட்டமும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த தகவல்கள் குறித்து பகிரப்பட்டிருந்த செய்திகள் தருமபுரம் ஆதீனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. உண்ணாவிரதம் பற்றி வெளியிடப்பட்ட பதிவும் நீக்கப்பட்டுள்ளது. செய்திகளை சிலர் திரித்து பரப்பியதால், தருமபுரம் ஆதீனம் தவறாக கருதி பதிவிட்டுவிட்டதாகவும், பின்னர் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications