வாகனம் மூலம் இலவச தண்ணீர் விநியோகம்: தேமுதிக எம்.எல்.ஏ ஏற்பாடு
தருமபுரி: தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் தண்ணீர் பிரச்சினை நிலவும் கிராமங்களுக்கு வாகனம் மூலம் இலவச குடிநீர் விநியோகம் செய்ய தேமுதிக எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தருமபுரி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. பாஸ்கர், கடந்த 2 ஆண்டுகளாகவே கோடைகாலத்தில் இலவச குடிநீர் விநியோகம் செய்து வருகிறார். வறட்சி அதிகரித்து, கடும் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் கிராமங்களுக்கு, லாரி அல்லது டிராக்டர் மூலம் சொந்த செலவில் தண்ணீரை விநியோகம் செய்வார்.
தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருந்த காரணத்தால் இந்த ஆண்டு குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. தற்போது தண்ணீர் பந்தலுக்கு தடையில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டதால் நேற்று முதல் குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூர் பகுதியில் அமைந்துள்ள கம்மம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சோளியானூர் உள்ளிட்ட கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், கடும் குடிநீர்ப் பிரச்சினை நிலவுகிறது.
இந்த கிராமங்களுக்கு நேற்று தருமபுரி எம்.எல்.ஏ. பாஸ்கர், நேற்று குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தேமுதிக நல்லம்பள்ளி ஒன்றியச் செயலர் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கம்மம்பட்டி ஊராட்சியில் குடிநீர்ப் பிரச்சினை தீரும் வரை வாகனங்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும். இதேபோல், இண்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும், மழைக்காலம் வரை தொடர்ந்து வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்க உள்ளோம் என்று எம்.எல்.ஏ. பாஸ்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications