கடமை செய்ய வந்தது குற்றமா? எஸ்எஸ்ஐ, விஏஓ, சர்வேயர் முகத்தில் சாணியை கரைத்து ஊற்றிய தாய்-மகள்.. ஷாக்
தர்மபுரி: தர்மபுரி அருகே பணி செய்ய சென்ற எஸ்எஸ்ஐ, சர்வேயர் உள்ளிட்டோர் மீது தாயும், மகளும் சேர்ந்து சாணியை கரைத்து ஊற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாலம்மாள். இவரது அக்காள் பெயர் முனியம்மாள். சாலம்மாளுக்கு சொந்தமான 85 சென்ட் நிலம் உள்ளது.

இதில் 5 சென்ட் நிலத்தை முனியம்மாள் தனது மகள் மாதம்மாள் ஆகியோருடன் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் தான் சாலம்மாள் ஆவணங்களில் உள்ளது போல் தனது நிலத்தை அளவீடு செய்து கொடுக்கும்படி தாசில்தாரிடம் மனு செய்தார். இதையடுத்து நிலத்தை அளவீடு செய்ய விஏஓ மாதேஷ், நிலஅளவையர் ஜோதி உள்ளிட்டோர் தண்டுகாரம்பட்டி கிராமத்துக்கு சென்றனர். இவர்களின் பாதுகாப்புக்காக தொப்பூர் எஸ்எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசார் சென்றனர்.
இந்த வேளையில் நிலத்தை அளவீடு செய்ய முனியம்மாள் மற்றும் மாதம்மாள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கே நிலத்தை அளவீடு செய்தால் நிலம் பறிப்போய் விடும் என அவர்கள் நினைத்து கடும் கோபத்தை ஏற்படுத்தினர். அதிகாரிகளை அங்கிருந்து செல்லும்படி அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அதிகாரிகள் மறுத்தனர். அதோடு தண்டுக்காரம்பட்டி ஏரி அருகே உள்ள சாலம்மாளின் நிலத்தை அளப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆத்திரமடைந்த முனியம்மாள், மாதம்மாள் ஆகியோர் சாணியை கரைத்து விஏஓ மாதேஷ், சர்வேயர் ஜோதி மற்றும் எஸ்எஸ்ஐ சரவணன் உள்ளிட்டோரின் முகத்தில் ஊற்றி அட்டூழியம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து சர்வேயர் ஜோதி தொப்பூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரை தொடர்ந்து அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கப்பதிவு செய்து முனியம்மாள், அவரது மகள் மாதம்மாள் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications