ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் விபூதி வைத்து ஆசி வழங்கிய தயாளு அம்மாள்!
சென்னை: ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் விபூதி வைத்து தயாளு அம்மாள் ஆசிர்வதித்து அனுப்பினார்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து கட்சியை வழிநடத்த திமுக தலைவர் பதவியில் ஸ்டாலினை அமர்த்துவது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வாக்குப் பதிவு
இந்நிலையில் திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28-இல் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் வாக்குப் பதிவு நடைபெறும் என்று பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.
முதன்மை செயலாளர் துரைமுருகன்
அதன்படி திமுக செயல்தலைவராக இருந்த ஸ்டாலின் தலைவர் பதவிக்கும், முதன்மை செயலாளராக இருந்த துரைமுருகன் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். கருணாநிதியின் சமாதியில் வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றனர்.
தயாளு அம்மாள்
பின்னர் கோபாலபுரத்துக்கு சென்ற அவர்கள் அங்கு கருணாநிதியின் படத்துக்கு விளக்கேற்றி வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றனர். இதையடுத்து அவர்களுக்கு கருணாநிதியின் மகன் தமிழரசு, தயாநிதிமாறன், சண்முகநாதன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
விபூதி வைத்து ஆசி
இதைத் தொடர்ந்து ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது இருவருக்கும் விபூதி வைத்து ஆசி வழங்கினார் தயாளு அம்மாள். இதையடுத்து இருவரும் சேர்ந்து அண்ணா அறிவாலயத்துக்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.