வெள்ள நீரில் மூழ்கிய சுரங்கப் பாதையில் சிக்கிய இரு வாகனங்களிலிருந்து 5 சடலங்கள் மீட்பு?
சென்னை: சென்னையில் சுரங்கப் பாதையில் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டு மீட்கப்பட்ட ஒரு கார் மற்றும் ஆட்டோவிலிருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். ஆனால் போலீஸ் தரப்பில் அப்படியெல்லாம் எந்த உடலும் மீட்கப்படவில்லை என்று மறுத்து வருகின்றனர்.
சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து சரியான தகவல்களை அரசு தரவில்லை என்று ஏற்கனவே புகார் கூறப்பட்டு வருகிறது.

இந்த நுிலையில், குமரன் நகர் அரங்கநாதன் சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற மழை நீருக்குள் மூழ்கிய காருக்குள் 3 பேரின் சடலமும், ஒரு ஆட்டோவிலிருந்து 2 பெண்களின் உடல்களும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகரில் உள்ள பிற சுரங்கப் பாதைகள் போலவே, அரங்கநாதன் சுரங்கப்பாதையிலும் மழைநீர், வெள்ளமென புகுந்தது. இதனால், அந்த வழியாக சென்ற கார், பஸ், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் நீருக்குள் தத்தளித்து மூழ்கின. காரில் பயணம் செய்த மற்றும் காரை இயக்கிய டிரைவர்கள் பலர் மாட்டிக் கொண்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

தொடர்ந்து மழை கொட்டி வந்ததால் அரங்கநாதன் சுரங்கப் பாதையில் இருந்த வாகனங்களை கண்டறிந்து அகற்ற முடியவில்லை. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மழை நீர் படிப்படியாக வடிய ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து இருந்த வாகனங்களை அகற்றும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, சுரங்கப் பாதையில் சிக்கி மூழ்கி கிடந்த வாகனங்கள் ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு காருக்குள் 3 பேர் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஒரு ஆட்டோவில் 2 பெண்களின் சடலம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து குமரன் நகர் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். ஆனால் உடல்கள் எதுவும் இல்லை என்று அவர்கள் கூறி விட்டனர்.
போலீஸார் உடல்கள் சிக்கியதை மறைக்கிறார்களா அல்லது உண்மையிலேயே உடல்கள் இல்லையா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications