சுவாதிக்குப் பதிவு திருமணம் நடந்ததா?.. பெங்களூர் நண்பர்கள் உதவியை எதிர்பார்க்கும் ராம்குமார் தரப்பு!
சென்னை: சுவாதிக்கு பெங்களூரில் ஆண் நண்பர் ஒருவர் இருந்தார். இருவருக்கும் பதிவுத் திருமணம் கூட நடந்து முடிந்து விட்டது. இதனால்தான் சுவாதியை அவரது குடும்பத்தினர் சென்னைக்கு அழைத்து வந்து விட்டனர் என்று ராம்குமாரின் வக்கீல் ராமராஜ் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அந்த ஆண் நண்பரை ஏன் போலீஸார் விசாரிக்கவில்லை என்றும் அவர் கேட்டுள்ளார். இந்த பதிவுத் திருமண விவகாரம் தொடர்பாகவும் போலீஸார் விசாரணை நடத்தாதது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இதேபோல அவர் மேலும் பல சந்தேகங்களையும் கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பெங்களூர் இன்போசிஸ் அலுவலகத்தில் தமிழக போலீஸார் விசாரணை ஏதும் நடத்தினரா என்று தெரியவில்லை. அதேசமயம், இந்த விவகாரம் தொடர்பாக சுவாதியின் நெருங்கிய தோழிகள் குறிப்பாக பெங்களூர் இன்போசிஸ் அலுவலகத்தில் பணியாற்றும் தோழிகள் அல்லது நெருக்கமான சக ஊழியர்கள் காவல்துறைக்கு உதவ முடியும் என்று கூறப்படுகிறது.
சுவாதிக்கு உண்மையிலேயே அங்கு ஏதேனும் பிரச்சினை இருந்ததா, வேறு யாருடனாவது அவருக்கு பிரச்சினை இருந்ததா என்பது போன்ற தகவல்களை அவரது நெருங்கிய தோழிகள், தோழிர்கள் அளிக்க முன்வரலாம் என்றும் ராம்குமார் தரப்பில் எதிர்பார்க்கிறார்கள்.
ஒருவேளை ராமராஜ் சொல்வது போல சுவாதிக்கு பெங்களூரில் பதிவுத் திருமணம் நடந்திருந்தால் நிச்சயம் யாராவது சாட்சிக் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அப்படி சாட்சிக் கையெழுத்துப் போட்டவர்கள் தாங்களாக முன்வந்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க முன்வந்தால் இந்த வழக்கில் உண்மையிலேயே வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை விசாரிக்க அல்லது பிடிக்க உதவியாக இருக்கும் என்றும் ராம்குமார் தரப்பு எதிர்பார்க்கிறது.
இதுதொடர்பாக பெங்களூரில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். ராம்குமார் பக்கம் மட்டுமே போலீஸார் தங்களது கவனத்தை செலுத்தாமல், சுவாதிக்கு இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் குறித்தும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் ராம்குமார் தரப்பு எதிர்பார்க்கிறது.












Click it and Unblock the Notifications