டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று இரவு அறிவித்தன. இதையடுத்து புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
டீசல் மீதான கட்டுப்பாட்டை படிப்படியாக அகற்றும் மத்திய அரசின் திட்டப்படி, டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி உயர்த்தி வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 11 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. ஆனால் பெட்ரோல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விலை உயர்வின்படி டெல்லியில் டீசல் லிட்டருக்கு வரி உள்பட 57 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.53.67-க்கு விற்கப்படுகிறது. மும்பையில் ரூ.60.08 ஆக இருந்த டீசல், விலை அதிகரிப்புக்குப் பிறகு ரூ. 60.70 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையின் மதிப்புக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் 16 ந் தேதிகளில் பெட்ரோல் -டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதே நேரத்தில் கடந்த 1ந் தேதி உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications