மீண்டும் சின்ன எம்ஜிஆர்! தினகரன் தம்பி பாஸ்கரனின் 'அடடே' பிரியாணி விருந்து- விரைவில் 'கட்சி'
Recommended Video
சென்னை: தினகரன், திவாகரன் மகன் ஜெய் ஆனந்தைத் தொடர்ந்து சசிகலா குடும்பத்தில் இருந்து மற்றொரு அரசியல் "புயல்" கிளம்பியுள்ளது. சின்ன எம்ஜிஆர் என்ற அடைமொழியுடன் மீண்டும் பாஸ் என்கிற பாஸ்கரன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு எம்ஜிஆர் தொண்டர்களை ஒருங்கிணைக்கப் போகிறாராம்.
போயஸ் கார்டனில் ஒருகாலத்தில் செல்வாக்காக வலம் வந்தவர் பாஸ் என்கிற பாஸ்கரன். சினிமா ஆசையில் ஊர் ஊராக தலைவன் பாஸ் எனப் போஸ்டர் ஒட்ட வைத்தவர்,
இப்போது நேரடி அரசியலுக்குள் நுழைந்துவிட்டார். இதன் முதல் கட்டமாக அம்பத்தூரில் இன்று அதகளப்படுத்தினார் பாஸ் (எ) பாஸ்கரன்.
நலத்திட்ட உதவிகள்
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அம்பத்தூர் பாரடைஸ் மகாலில் நலத்திட்ட உதவிகள் ஒரு பக்கம்... மறுபக்கம் 2,000 பேருக்கு சிக்கன் பிரியாணி என இன்று அதகளப்படுத்தினார் பாஸ்கரன்.
வனிதாமணி மகன்கள்
இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஸ்கரன் ரசிகர் ஒருவர், சசிகலா அக்கா வனிதாமணியின் மகன் பாஸ்கரனுக்கு கட்சி பொறுப்பு எதுவும் கொடுக்காமல், ஜெயா டி.வியை நிர்வாகம் செய்யும் பொறுப்பைக் கொடுத்தார் ஜெயலலிதா. இடையில் என்ன நடந்ததோ திடீரென அவரின் செயல்பாடுகள் பிடிக்காமல் அதில் இருந்து விலக்கப்பட்டார்.
தலைவன் பாஸ்
கார்டனுக்கு எதிராக ஜெயலலிதா இருந்த காலத்திலேயே தலைவன் பாஸ் என்ற பெயரில் போஸ்டர்களை ஒட்ட வைத்தார். இதனால், கார்டனின் கோபத்துக்கும் ஆளானார். உண்மையில், சசிகலாவின் அக்கா வனிதாமணி மீது தனி பாசம் கொண்டவர் ஜெயலலிதா. அதனால்தான் அவருடைய மூன்று மகன்களான டி.டி.வி.தினகரனுக்கு கட்சியில் முக்கிய பதவியும் இரண்டாவது மகனான பாஸ்கரனுக்கு ஜெயா டி.வி. நிர்வாக பொறுப்பும் இளைய மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாகவும் தேர்ந்தெடுத்தார். ஆனால், எல்லாம் சில காலம்தான் நீடித்தது.
விரைவில் கட்சி
இப்போது அ.தி.மு.க தனித்தனி பிரிவுகளாக செயல்படுவதால், எம்.ஜி.ஆர் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணியில் இறங்கிவிட்டார் பாஸ்கரன். எம்.ஜி.ஆரைப் போலவே வாரிக் கொடுக்கும் குணம் வாய்ந்தவர். அம்பத்தூர் கூட்டம் போலவே மாநிலம் முழுவதும் கூட்டம் நடத்த இருக்கிறார். தினகரனின் பாதையில் இவர் குறுக்கிடவில்லை. தனிப் பாதையில் பயணிக்கிறார் என்கின்றனர். இன்று ஒட்டப்பட்ட போஸ்டர்களில் எம்.ஜி.ஆர் மட்டுமே சிரித்துக் கொண்டிருக்கிறார். தலைவன் என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் தலைவர்கள் ஆகிவிட்டார்களா என்ன?
நாடு தாங்குமா!