ஜெ. சமாதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திடீரென 30 நிமிடம் தியானம்
அதிமுக அணிகள் இணைந்த நிலையில் ஜெயலலிதா சமாதிக்கு சென்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திடீர் தியானம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: அதிமுக அணிகள் இணைந்துள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திடீரென ஜெயலலிதா சமாதிக்கு சென்று சுமார் 30 நிமிடம் தியானம் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவில் மகிழ்ச்சியோ, பிரளயமோ அது ஜெயலலிதாவின் சமாதியை முன்வைத்துதான் அரங்கேறுகிறது. அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இன்று இணைந்தன.
இதனைத் தொடர்ந்து அனைவரும் ஒருசேர ஜெயலலிதா சமாதிக்கு போய் மலரஞ்சலி செலுத்திவிட்டு பதவியேற்புக்கு சென்றனர். அதேநேரத்தில் இந்த இணைப்பை எதிர்க்கும் தினகரன், தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சென்னை அடையாறு இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து அந்த எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றனர். அங்கு சுமார் 30 நிமிடம் அவர்கள் தியானத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூட்டாக ஜெயலலிதா சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினர். அப்போது எம்.எல்.ஏக்கள் பலரும் மண்டியிட்டு ஜெ. சமாதியை வணங்கினர்.