’பரோல்’ சசிகலாவை சந்திக்க வர முடியாது... சைலண்ட் மோடுக்கு போன தினகரன் ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள்
பரோலில் வந்துள்ள சசிகலாவை சந்திக்க வரமுடியாது என தினகரனின் ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள் கூறியுள்ளனராம்.
சென்னை: பரோலில் வந்துள்ள சசிகலாவை நேரில் சந்திக்க வரமுடியாது என அமைச்சர்கள் பலரும் போனை சுவிட்ச் ஆப் செய்திருப்பதால் தினகரன் தரப்பு படு அப்செட்ட்டில் இருக்கிறதாம்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து பரோலில் வெளிவரும் சசிகலாவை வரவேற்க தடபுடல் ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் இளவரசி மகன் விவேக். கிருஷ்ணபிரியா வீட்டில்தான் சசிகலா தங்க இருக்கிறார்.
சசிகலாவை சந்திக்க வாருங்கள் என அமைச்சர்கள் சிலருக்கு அழைப்பு சென்றிருக்கிறது. இந்தக் கோரிக்கையை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர் என்கின்றனர் அ.தி.மு.க பிரமுகர்கள்.

திடீர் பரோல் கேட்ட சசி
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, மகாதேவன், சந்தானலட்சுமி உள்ளிட்ட நெருங்கிய குடும்ப உறவுகள் இறந்தபோதுகூட பரோல் கோரி மனுத்தாக்கல் செய்யவில்லை. ஆனால், கணவர் நடராஜனின் உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து, 15 நாள் பரோல் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

ஆவணங்கள் சரியில்லை
மருத்துவ ஆவணங்கள் முழுமையாக சேர்க்கப்படவில் என்ற காரணத்தைக் கூறி தள்ளுபடி செய்தார் சிறையின் முதன்மைக் கண்காணிப்பாளர் சோமசேகர். இதையடுத்து, மருத்துவ சான்றுகளுடன் மீண்டும் மனுவை அளித்தார் சசிகலா.

நெருக்கிய சசி உறவுகள்
அவரது கோரிக்கையை கர்நாடக உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டாலும், தமிழக அரசு தடையில்லா சான்றை அளிக்கவில்லை. தமிழக அரசிடம் இருந்து என்.ஓ.சி வரவில்லை எனக் கூறவே, மாநில அரசின் காவல்துறையை நெருக்கினர் சசிகலா உறவுகள்.

சசிக்கு கிடைத்தது பரோல்
இதையடுத்து, நேற்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் இருந்து இமெயில் மூலம் தகவல் சென்றுள்ளது. தற்போது ஐந்து நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது கர்நாடக சிறைத்துறை.

சந்திக்க தடை இல்லை
இந்த ஐந்து நாட்களும் தி.நகரில் தங்கியிருந்தபடியே குடும்ப உறவுகளைச் சந்திக்க இருக்கிறார் சசிகலா. அவர் யாரையும் சந்திக்கக் கூடாது என எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை.

போனை கட் செய்யும் அமைச்சர்க்கள்
சசிகலா சிறைக்குப் போனபோது இருந்த அதிமுக தற்போது இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையை கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டுவிட்டனர். பரோலில் சசிகலா வரும்போது, தங்களது ஆதரவு அமைச்சர்கள் வந்து பார்க்க வேண்டும் என தினகரன் தரப்பில் இருந்து போன் சென்றுள்ளது. ஆனால் யாரெல்லாம் ஸ்லீப்பர் செல்கள் என தினகரன் தரப்பு நினைத்ததோ அந்த அமைச்சர்கள் செல்போன் அழைப்பு வரும்போதே தொடர்பைத் துண்டித்துவிட்டனர்.

சந்திக்க வர அமைச்சர்கள் விதித்த நிபந்தனை
இதனையடுத்து அமைச்சர்களின் பி.ஏக்களைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதற்கும் எந்தப் பதிலும் இல்லை. தொடர்ந்து முயற்சித்தபோது பேசிய அமைச்சர் ஒருவர், பரோலில் வரும் அவரைப் பார்த்து என்ன ஆகப் போகிறது? ஒரு காலத்தில் அதிகாரத்தின் பக்கம் அவர் இருந்தார். அவரை நம்பி நாங்கள் இருந்ததும் உண்மைதான். இப்போது அவரைச் சந்திக்கச் சென்றால், எங்கள் அரசியல் வாழ்க்கை அடிபட்டுப் போய்விடும். நாளை எடப்பாடி பழனிச்சாமி பலம் பெற்றுவிட்டால், எங்கள் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடும். எடப்பாடி இருக்கும் வரையில்தான் ஆட்சி இருக்கும். இதுதான் யதார்த்தம். ஆட்சியைக் கவிழ்க்க மாட்டேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டால், அவரை நாங்கள் சந்திப்பது குறித்து பேசி முடிவெடுப்போம்.

சசி சகாப்தம் முடிந்தது
வரும் காலங்களில், கட்சிக்குள் மீண்டும் சசிகலா தலையீடு என்பதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளச் சொல்லுங்கள் எனக் கறாராகக் கூறிவிட்டனர். இதுகுறித்து டெல்டா மாவட்ட அமைச்சர் ஒருவர், எடப்பாடி பழனிசாமியிடம் பேசும்போது, அண்ணே...நீங்க இருப்பதால்தான் ஆட்சி நீடிக்குது. எனக்கும் வயசாகிவிட்டது. இனியும் பழைய அரசியல் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டேன். என்ன சொல்கிறீர்களோ அதன்படியே செயல்படுவேன். அந்தம்மாவை சந்திக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை எனப் பேசியிருக்கிறார். சசிகலாவுக்கு வழங்கப்பட்ட 5 நாள் பரோலால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர் அமைச்சர்கள். மாநில உளவுத்துறையும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications