நாங்க பரம்பரை பணக்காரங்க... ஜெயலலிதாவினால் சம்பாதிக்கவில்லை - தினகரன்
எங்க குடும்பம் பரம்பரையாகவே பணக்கார குடும்பம் ஜெயலலிதா மூலமாக சம்பாதித்தோம் என்று சொல்வது பொய் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் முன்பே நான் பிசினஸ் செய்தேன், எங்க குடும்பம் பரம்பரையாகவே பணக்கார குடும்பம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு இன்று அளித்த பேட்டியில், வருமானவரித்துறையினர் நடத்தும் சோதனைகள் பற்றியும், சொத்துக்கள் பற்றியும் விரிவாகவே பேசினார்.
தனது குடும்பத்தினர் ஜெயலலிதாவிடம் அறிமுகமானது எப்படி என்றும், வீடியோ கடை வந்தது எப்படி என்பது வரை தெளிவாகவே பேசினார்.
லட்சாதிபதிகள்
வெளிநாடு சுற்றுப்பயணம் செய்த போது சித்தப்பா நடராஜன், சித்தி சசிகலாவும் வீடியோ கேமரா வாங்கி வந்தனர் என்றார். அதை ஒன்றரை லட்சம் வரி கட்டி இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். வேலையில்லாத தனது நண்பருக்கு வீடியோ கேசட் கடை வைத்து கொடுத்தனர் என்றார் தினகரன்.
ஆட்சிக்கு வரும் முன்பே பணக்காரன்
ஜெயலலிதா முதல்வரான பின்னர்தான் நாங்கள் பணம் சம்பாதித்தோம் என்று கூறுவதெல்லாம் தவறான கருத்து. 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சி நடக்கும் போதே வங்கியில் 90 லட்சம் ரூபாய் லோன் பெற்று பிசினஸ் செய்திருக்கிறேன் என்றார் தினகரன்.
வசதியான குடும்பம்
மன்னார்குடி சுற்றுவட்டாரத்திலேயே எங்க குடும்பம் பணக்கார குடும்பம். நன்றாக படித்த நபர்தான் ஜெயலலிதாவின் பாதுகாப்பாளராக இருந்தார். இதெல்லாம் பணத்தை எதிர்பார்த்தோ, பதவிக்காகவோ இல்லை.
சொந்த பணம்
இந்த பணம் எல்லாமே நாங்கள் சொந்தமாக சம்பாதித்த சொத்து. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர்தான் சம்பாதித்தது என்று கூறுவதெல்லாம் தவறானது. படித்தவர்கள், பிசினஸ் செய்து சம்பாதித்திருக்கிறோம் என்று கூறினார்.
அப்போ சொல்லலையே
இது போன்ற பேட்டியை எல்லாம் கேட்பதற்கு ஜெயலலிதா இல்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை இது போன்ற பேட்டியை கொடுக்க தினகரனுக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ தில்லாவது இருந்திருக்குமா?
பழியும், பாவமும் ஜெயலலிதாவிற்கே
ஜெயலலிதாதான் ஏ1 என்று கூறிய தினகரன், சசிகலா குடும்பம் பணக்கார குடும்பம் என்றும், 2001 வரை ஓபிஎஸ் என்ன செய்து கொண்டிருந்தார் வருமானவரி எவ்வளவு கட்டியிருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மக்கள்தான் இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.