இபிஎஸ் இன்னொரு ஓபிஎஸ்- தினகரனிடம் பற்ற வைக்கும் எம்.எல்.ஏக்கள்- வெடித்து கிளம்பும் கொங்கு கோஷ்டி!
சென்னை: அதிமுகவின் இன்னொரு ஓபிஎஸ்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என டிடிவி தினகரனிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து போட்டு கொடுத்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் அதிமுக ஓபிஎஸ், அதிமுக இபிஎஸ், அதிமுக தினகரன் கோஷ்டி என வெளிப்படையாக உடைந்துள்ளது. இவை அல்லாமல் ஜாதிய அடிப்படையிலான கோஷ்டிகளும் வரிசைகட்டு நிற்கின்றன.
டிடிவி தினகரன், திஹார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் முதல்வர் இபிஎஸ்-ன் கொங்கு கோஷ்டி கை ஓங்கியது. இதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தினகரன், இபிஎஸ் கோஷ்டி மோதல்
இந்த கோஷ்டி வசம் உள்ள நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா டிவி, பாஜகவை கடுமையாக விமர்சித்தது. ஆனால் இபிஎஸ் கோஷ்டியோ பாஜகவுடன் இணக்கமாக போனது. இந்த பஞ்சாயத்து இப்போது பகிரங்கமாக வெடித்திருக்கிறது.

மீண்டும் அதகளம்...
இந்நிலையில் தினகரன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். அவர் அளித்திருக்கும் பேட்டிகள் அனைத்துமே மீண்டும் அதிமுகவில் அதகளப்படுத்தப் போகிறார் என்பதையே காட்டுகின்றன.

எம்.எல்.ஏக்களிடம் கருத்து கேட்பு
இதை இபிஎஸ் கோஷ்டி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்போது தினகரனை அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இச்சந்திப்புகளில் எம்.எல்.ஏக்களின் கருத்துகளை அதிகநேரம் கொடுத்து கேட்டு வருகிறார் தினகரன்.

எகிறும் கொங்கு கோஷ்டி
இதில் எதிரி ஓபிஎஸ்ஸை கூட மன்னித்துவிடலாம் துரோகி இபிஎஸ்ஸை மன்னிக்கவே கூடாது என கொளுத்திப் போடுகின்றனர் எம்.எல்.ஏக்கள். இதனால் கொங்கு கோஷ்டி கொந்தளிப்பில் இருக்கிறது. அதிமுகவில் எந்த நேரத்திலும் மேலும் ஒரு டமால் சப்தம் கேட்பது நிச்சயம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications