லைட் தொப்பி தொட்டாலும் ஷாக் அடிக்காது.. - ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் அணியின் அலப்பறை
தொப்பியில் லைட் வைத்து இரவிலும் பளிச் என்று தெரியும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர் டிடிவி தினகரன் அணியினர்.
சென்னை: ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் அதிமுக அம்மா அணி தொண்டர்கள், நிர்வாகிகள், பளிச் என எரியும் தொப்பி அணிந்து உலா வருகின்றனர்.
ஆர்.கே. நகரில் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அக்னி வெயிலை விட ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
பலமுனை போட்டி நிலவுவதால் டிடிவி தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ், கங்கை அமரன், மதிவாணன், கலைக்கோட்டுதயம், தீபா ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்களை சந்தித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்
அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டிடிவி.தினகரன் தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஆர்.கே நகரில் புது வண்ணாரப்பேட்டை , மங்கம்மா தோட்டம் , சிவகாமி நகர் , பிரஸ் கோட்டர்ஸ் ,ஜீவா நகர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

அனல் பறக்கும் பிரச்சாரம்
அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,நடிகர் வையாபுரி, நடிகை பபிதா உள்ளிட்டோர் புதுவண்ணாரப்பேட்டை, இந்திராகாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

தகவல் தொழில் நுட்ப கல்லூரி
ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் தகவல் தொழில்நுட்பத்துறையில் அப்பகுதி மாணவர்கள் சிறந்து விளங்க தகவல் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும் என்று கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்ற நினைத்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்த தினகரன், வரும் 15ம் தேதி தேர்தல் முடிவுக்கு பின்னர், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்.

எரியும் தொப்பி
டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்கள் அனைவரும் தலையில் தொப்பியை மாட்டிக்கொள்கின்றனர். இருட்டிலும் சின்னத்தை பளிச் என்று தெரியும் வகையில் தொப்பியை சுற்றியும் சீரியல் பல்பை சுற்றி வைத்து உலா வருகின்றனர். லைட் தொப்பிதான் ஆனால் ஷாக் அடிக்காது என்று கூறி அனைவருக்கும் போட்டு விடுகின்றனர்.

செந்தில் பாலாஜி இரட்டை இலை
கடந்த 2015ஆம் ஆண்டு இடைத்தேர்தலின் போதே அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி இரட்டை இலை சின்னத்தை சீரியல் பல்பில் மாட்டி அதை தொப்பி போல தலையில் மாட்டிக்கொண்டு உலா வந்தார். அதே பாணியில் தற்போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் எரியும் தொப்பியுடன் உலா வருகின்றனர்.
தலையில தொப்பி எரிவது சரிதான்... மின்னணு இயந்திரத்தில் தொப்பிக்கு வாக்களித்து சிவப்பு லைட்டை எரிய வைப்பது வாக்காளர்கள் கையில்தானே உள்ளது.












Click it and Unblock the Notifications