கேடி, ரவுடி, திருடன்- தினகரனை சரமாரியாக வெளுத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
Recommended Video
வேடசந்தூர்: வேடசந்தூரில் அதிமுக விழாவில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் தினகரனை நார் நாராக கிழித்து தொங்கவிட்டார்.
இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், ஸ்டாலின் முதல்வர் கனவில் இருந்தார். ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுகவை எப்படியாவது உடைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் காயை நகர்த்தி கொண்டிருந்தார். அதற்கு அவர்களுக்கு 20 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது.
இவர்களுக்கு கிடைத்த 18 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு ஆளுநரிடம் மனு கொடுத்தனர். தினகரன் யார், ஜெயலலிதாவால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட ஒரு துரோகி. அந்த துரோகியுடன் சேர்ந்து கொண்டு ஜெயலலிதாவால் எம்எல்ஏ ஆக்கப்பட்ட 18 பேரும் மனு கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் சோறுதான் சாப்பிடுகின்றனரா. வேறு ஏதாவது சாப்பிடுகின்றனரா.
எங்க போச்சு அறிவு
ஜெயலலிதாவைவிட மாபெரும் தலைவரிடம் போயிருந்தால் எங்களுக்கு பெருமை. ஆனால் ஜெ.வால் கேடி, ரவுடி என்று ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரனுடன் 18 பேரும் சேர்ந்து கொண்டு ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். கேப்பையில் நெய் வழிகிறது என்றால் கேட்பவனுக்கு எங்கு போச்சு அறிவு.
அமைச்சர் பதவி
இந்த 18 பேரும் ஏதோ தியாகம் செய்தது போலவும், இவர்களால்தான் கட்சியே நடப்பதும் போலவும் ஆளுநரிடம் சென்று மனு கொடுக்கிறார்கள். ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரனிடம் இருந்து பெற்றுக் கொண்டு ஸ்டாலின் மூலம் வாங்கி கொள்கின்றனர். 18 பேரும் திமுகவிடம் சென்றுவிட்டால் ஸ்டாலின்தான் முதல்வர் என்றும் தினகரன் துணை முதல்வர் என்றும் மற்றவர்கள் அமைச்சர் என்றும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
வழக்கை திரும்ப பெறவுள்ளேன்
அரசியலில் ஆண்மை இருந்தால் வழக்கு போடுங்கள். வெற்றி பெற்றால் நீங்கள் வாங்க, தோல்வி அடைந்தால் நாங்கள் போகிறோம். தினகரன், தங்க தமிழ் செல்வனை அடிமை போல் நடத்தியதால்தான் அவர் வழக்கை திரும்ப பெறவுள்ளேன் என்கிறார். தங்க தமிழ் செல்வனை தொகுதி மக்கள் தேடி கொண்டிருக்கிறார்கள் என்கிறார். கெட்டவனுக்கு ஓட்டு போட்டதால் தேடுகிறார்கள்.
ஜெ.வை மீண்டும் விமர்சனம் செய்த சீனி
தினகரன் என்ன தியாக செம்மலா. 37 ஆண்டுகளாக ஜெயலலிதாவிடம் இருந்து கொள்ளையடித்த சசிகலாவுடன் சேர்ந்து கொள்ளையடித்த துரோகிதானே. ஜெயலலிதா உங்களால்தானே சிறைக்கு சென்றார். அவர் சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு. அவருக்கு என்ன புள்ளையா குட்டி இருக்கா, புருஷன் புள்ள இருக்கா, பந்த பாசம் இருக்கா என்றார் முத்தாய்ப்பாக.