மக்கள் மீது கல்வீச்சு... பஸ் டிரைவர் போனை உடைத்து ரகளை.. சப் கலெக்டருக்கு டிரான்ஸ்பர்!
திண்டுக்கல்: திண்டுக்கலில் யாரைப் பார்த்தாலும் சண்டை போட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டு வந்த சப் கலெக்டரை வேறு ஊருக்கு இடமாற்றம் செய்துள்ளனர். அங்கு அவர் என்னென்ன அக்கப் போரை செய்யப் போகிறாரோ என்று அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் சப் கலெக்டராக மதுசூதன ரெட்டி என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அவர் வந்தது முதலே சண்டைக்காடாக மாறியது திண்டுக்கல்.
கடந்த செப்டம்பர் 19ம் தேதி இரவு 11 மணிக்கு சிறுமலை செக்- போஸ்ட்டில், வனத்துறை ஊழியர்களிடம் தகராறு செய்தார். அவ்வழியாக சென்ற தனியார் பஸ் டிரைவரின் மொபைல் போனை வாங்கி உடைத்தார். மறுநாள் காலை போக்குவரத்து காவலர் ஒருவரின் வாக்கி-டாக்கியை பறித்தார்.
சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் பங்கேற்க வந்த கரியாம்பட்டி கிராம மக்கள் மீது கல் வீசித் தாக்கினார்.
இவரது இந்த ரவுடித்தனமான போக்கால் வெகுண்ட பொதுமக்கள் திண்டுக்கல் நகர் போலீஸில் புகார் கொடுத்தனர். ஆனால் சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய போலீஸாரோ, இந்தப் புகாரை வாங்கக் கூட மறுத்தனர்.
இந்த நிலையில் உயர் அதிகாரிகளுக்கு மதுசூதன ரெட்டியின் அடாவடிப் போக்கு குறித்து புகார்கள் பறந்தன. இதையடுத்து அவரை கட்டாய விடுப்பில் அனுப்பினர். 10 நாள் லீவில் போனார் ரெட்டி. ஆனால் வந்ததும் மறுபடியும் வேலையை ஆரம்பித்தார்.
இதையடுத்து அவரை தற்போது பெரம்பலூருக்கு மாற்றியுள்ளனர். ஆனால் அவர்அங்கு போய் என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ என்ற அச்சத்தில் அந்த ஊர் மக்கள் உள்ளனர்.
பேசாமல் ரெட்டிக்கு கவுன்சிலிங் கொடுக்க அரசு ஏற்பாடு செய்யலாம்...!












Click it and Unblock the Notifications