முதல் மதிப்பெண் எடுத்த மாணவி தற்கொலை செய்வது தான் புதிய இந்தியா... வெடித்தெழுந்த இயக்குனர் அமீர்!
மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்த மாணவி தற்கொலை செய்வது தான் புதிய இந்தியா என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் : மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்த மாணவி தற்கொலை செய்த கொள்வது தான் புதிய இந்தியா என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு இயக்குனர் உலகம் திரண்டு நின்று ஒருமித்தக் குரல் கொடுத்து வருகின்றனர். அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இயக்குனர் அமீர் கதறிய கதறல்கள் இதோ : இந்த இந்தியாவை தான் உருவாக்கியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள், இதுக்குத் தான் இவர்கள் புதிய இந்தியா என்று கனவு கண்டார்கள். நீட் தேர்விற்கு தமிழகத்தில் ஆதரவு கொடுத்த அரசியல்வாதிகளைப் போல வேறு யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.
ஒவ்வொருவரும் செத்தால் தான் வருவீர்களா என்று அனிதாவின் அண்ணன் கேட்கிறானே பதில் சொல்லுங்கள். நீட் வந்தால் நம்ம வீட்டு பிள்ளை படிக்க முடியாது என்பதைத்தானே நாங்கள் சொன்னோம்.

புதிய இந்தியாவின் சாதனை
+2வில் தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலை என்று தான் பேப்பரில் படித்திருப்போம் அது பழைய இந்தியா. ஆனால் மாநிலத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவி மரணம் அடைந்திருக்கிறாள் இது தான் புதிய இந்தியா

ஓராண்டு முன்பிருந்தால் டாக்டர்
மாநில அரசு நிர்வாகங்கள் மத்திய அரசு இட்ட கட்டளையை ஏற்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். மத்திய மாநில அரசு சேர்ந்து செய்த கொலை இது. அதிக மதிப்பெண் எடுத்தும் அனிதாவால் மருத்துவராக முடியவில்லை. இதே மதிப்பெண்ணை கடந்த வருஷம் அனிதா பெற்றிருந்தால் அவள் இந்நேரம் மருத்துவராகியிருக்கலாம்.

சமுதாயத்தின் அடையாளம்
அனிதா சாதியின் அடையாளம் கிடையாது, தமிழ்ச்சமுதாயத்தின் அடையாளம். தமிழக அரசு வழங்கும் பாடித்திட்டத்தில் மாணவர்கள் படிக்கும் படிப்பு வீண், மத்திய அரசு தான் உன்னுடைய படிப்பை முடிவு செய்யும் என்பதைத் தான் அனிதாவின் மரணம் சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றிருக்கிறது.
மக்கள் சக்தியே நிரந்திரம்
இந்தப் பதவி, கொடி, எதுவுமே நிரந்தரமில்லை. மக்கள் சக்தி தான் முக்கியம், மக்கள் ஒரு நாள் உங்களை தூக்கியடிப்பார்கள். எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு 10 பேர், 20 பேர் இருப்பதாக பேரம் நடத்துகின்றனர். மக்கள் தேர்ந்தெடுத்த எம்எல்ஏவை தேடிச் சென்று ஏன் காத்துக்கிடக்கிறீர்கள். மக்கள் குறைகளை போக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ புதுச்சேரியில் போய் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறார் என்று உணர்ச்சி ததும்ப பேசினார் அமீர்.












Click it and Unblock the Notifications