ஊடகவியலாளர்களுக்கு ஒரு சீனியரின் அட்வைஸ்!
- இயக்குநர் கவிதாபாரதி
இது இளையராஜா தொடர்பான பதிவு மட்டுமன்று...
நான் ஊடகத்துறையிலிருந்து வந்தவன்.
இன்னும் அத்துறையின்பால் அளவற்ற ஆர்வமும் மரியாதையும் கொண்டவன்..
அந்த உரிமையில் சில ஆலோசனைகளைச் சொல்ல விரும்புகிறேன்.
முதலில் களத்திலிருந்து செய்திகளை வழங்கும் செய்தியாளர்களுக்கு மொழிப்பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம்.
சொல்ல நினைக்கும் செய்தியை தடையின்றிச் சொல்ல இயலாமல் வார்த்தைக்கு வார்த்தை வந்து வந்து என்னும் பொருளற்ற இணைப்புச் சொல்லைப்பயன்படுத்தி தடுமாறுவது தவிர்க்கப்பட வேண்டும்.

என்னன்னு பாத்தீங்கன்னா, என்னன்னு கேட்டீங்கன்னா என்பது போன்ற முதிர்ச்சியற்ற மொழியில் செய்தி வழங்குவதைத் தவிர்க்கும் விதத்தில் பயிற்சியளிப்பது அவசியம்.
மிக முக்கியமானது யாரிடமிருந்து கருத்தைப் பெற விரும்புகிறார்களோ அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வதைக்கற்றுத் தரவேண்டியது அவசியம்.
எந்த இடத்திலும் ஒலிவாங்கியை நீட்டி, எதைப்பற்றி வேண்டுமானாலும் கருத்துக் கேட்பது அரசியல்வாதிகளுக்கு உவப்பானதாக இருக்கலாம்.. மற்ற துறை சார்ந்தவர்களிடம் காரணத்தைக்கூறி அவர்கள் அதுபற்றிக் கருத்துக் கூற விரும்பினால் முறைப்படி நேரமும் அனுமதியும் பெற்ற பிறகே ஒளிப்பதிவு செய்ய வேண்டும்.
சம்மந்தப்பட்டவருக்கு கருத்துக் கூற விருப்பமில்லையெனில் அது கருத்துக் கேட்கும் நிறுவனத்தை உதாசீனப்படுத்துவதாகக் கருதலாகாது.
Bite shot கெடச்சா நல்லது.. fight shot கெடச்சா அதைவிட நல்லது என்பது ஊடக தர்மமாகாது.
இதைப் பற்றி ஊடகங்கள் தமக்குள் சில நெறி முறைகளை வகுத்துக் கொண்டு கடைபிடிக்க வேண்டும்.. இல்லையெனில் இதைப் போன்ற பரபரப்பான சூழல்களை உருவாக்குமாறு மற்ற செய்தியாளர்களும் தூண்டப்படுவார்கள்.. இதன் உச்சமாக பரபரப்பான எதிர்மறைச் சம்பவம் உருவாக்கப்படும்போது அதைச் செய்யாத மற்ற செய்தியாளர்கள் நல்ல வாய்ப்பை நழுவ விட்டதற்காக குற்றஞ்சாட்டப்படும் நிலைமையும் உருவாகலாம்.
மற்ற எந்தத் துறையைவிடவும் ஊடகத்துறையின் அறவீழ்ச்சி சமூகத்தை மிக வேகமாக பின்னோக்கியே இட்டுச்செல்லும்.
சத்யமேவ ஜெயதே.












Click it and Unblock the Notifications