தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க தேர்தலில் விக்ரமன் ஹாட்ரிக் வெற்றி
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக இயக்குநர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் தேர்தலில் இயக்குநர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். இயக்குநர் விக்ரமன் தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடைபெற்றது.

சென்னை வடபழனியில் உள்ள மியூசிக் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தத் தேர்தலுக்கு முன்னாள் மாவட்ட நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் பார்வையாளராக செயல்பட்டார். காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணியளவில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் 'புது வசந்தம்' அணி சார்பில் இத்தேர்தலைச் சந்தித்த விக்ரமன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1,532 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள விக்ரமன், இயக்குநர் சங்க தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரமன் வெற்றி பெற்றதையடுத்து, அடுத்து 6 மாதத்திற்கு உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும், இந்த வெற்றிக்குப் பாடுபட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications