செந்தில், லியாகத் அலி மற்றும் 'கேப்டனின் மாஜி தோஸ்த்' ராவுத்தர்... அதிமுகவின் பிரச்சார பீரங்கிகள்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறிய இம்ராஹிம் ராவுத்தர், லியாகத் அலிகான் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர்களை தேர்தல் பிரச்சாரக்களத்தில் அதிமுக இறக்கியுள்ளது.
அதிமுகவில் ஏற்கனவே 19 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் தமிழகம் முழுவதும் 40 தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பிரபல நட்சத்திரங்கள் வெண்ணிற ஆடை நிர்மலா, குயிலி, செய்தி வாசிப்பாளர்கள் பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோர் பிஸியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமராஜன், செந்தில், உள்ளிட்ட நடிகர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நட்சத்திரப் பேச்சாளர்களின் 2வது பட்டியலை இன்று அஇஅதிமுக வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை முதல் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்.
பேராசிரியர் தீரன்
இரண்டாவது பட்டியலில் கா.ஜெகவீரபாண்டியன், கோ.வேல்முருகன், முனைவர் ஸ்ரீதர் நாராயணன், பேராசிரியர் தீரன், விழுப்புரம் செல்வராஜ் நட்சத்திரப் பேச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
லியாகத் அலிகான், இப்ராஹிம் ராவுத்தர்
விஜயகாந்த் திரைப்படத்துரையில் அறிமுகமான காலத்தில் இருந்து அவரது படங்களை தயாரித்த நண்பர் இப்ராஹிம் ராவுத்தர், சின்னக்கவுண்டர் படத்தை இயக்கி பிரபலப்படுத்திய ஆர்.வி. உதயகுமார், இயக்குநர் வி.ஜெயப்பிரகாஷ், அனல் பறக்கும் வசனங்களை எழுதிய லியாகத் அலிகான் ஆகியோரும் நாளை முதல் அதிமுகவின் பிரச்சார களத்தில் இறங்குகின்றனர்.
தியாகு, வையாபுரி
திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வந்த தியாகு, வையாபுரி, ஜெயகோவிந்தன், சரவணன், எம்.எஸ்.அருள்மணி, ஏ.கே.ராஜேந்திரன், ஜெயசூரியகாந்த்ஜி, பாலு ஆனந்த், நகைச்சுவை நடிகை கே.வாசுகி ஆகியோரும் நாளை முதல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குயிலியின் பிரச்சாரம்
கடந்த வாரம்முதல் அதிமுகவிற்காக பட்டி தொட்டி எங்கும் பிரச்சாரம் செய்து வரும் நடிகை குயிலியின் பேச்சு செம ஹைலைட் என்கின்றனர். தமிழகத்திற்கு பல திட்டங்கள் தீட்டி நன்மைகள் கிடைக்க பாடுபடும் ஜெயலலிதா ஹீரோ, கருணாநிதி வில்லன் என்று கூறி பேசுவது அனைவரையும் கவர்கிறதாம். தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றிக்கொடி நாட்டும் என்கிறார் குயிலி.